📅 Friday, 11 September 2026 IST | ஆவணி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 28, 2026 04:33 PM

ஸ்ரேயாஸ் ஐயர் 3 வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக வருவார்.. 10 ஆண்டு முன்பு கணிப்பு.. EX வீரர் கருத்து

ஸ்ரேயாஸ் ஐயர் 3 வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக வருவார்.. 10 ஆண்டு முன்பு கணிப்பு.. EX வீரர் கருத்து

ஸ்ரேயாஸ் ஐயர் 3 வகை கிரிக்கெட்டிலும் கேப்டனாக வருவார்.. 10 ஆண்டு முன்பு கணிப்பு.. EX வீரர் கருத்து

மும்பை: ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு நாள் அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணியை வழிநடத்துவார் என்று தாம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கணித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மணீந்தர் சிங் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியதைத் தொடர்ந்து மணீந்தர் சிங் இந்த கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்த வெற்றியானது ஐயரின் தலைமையில் இந்திய அணி பெற்ற முதல் தொடர் வெற்றியாகும்.

இது குறித்து பேசிய 61 வயதான மணீந்தர் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் எப்போதும் ஒரு தனித்துவமான வீரராகத் தெரிந்தார் என்று கூறினார். மும்பையைச் சேர்ந்த இந்த பேட்ஸ்மேனின் ஆட்டத் தரம், அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டனாவார் என்ற நம்பிக்கையை தமக்கு ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய அவர் "ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு நாள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் பொறுப்பை ஏற்பார் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே நான் கணித்திருந்தேன். அது என்னுடைய தனிப்பட்ட கணிப்பு. அவரது ஆட்டத்தை நான் பார்க்கும் போதெல்லாம், அவரிடம் ஒரு தனித்துவமான திறமை இருப்பதை உணர்ந்தேன். அவர் எப்போதும் ஒரு சிறப்பான வீரராகத் தெரிந்தார்" என்று கூறினார்.

"அதனால்தான் அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணியை வழிநடத்துவார் என்று நான் நம்பினேன். அது முழுமையாக நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர் இந்தியாவின் டி20 கேப்டனாக மாறியுள்ளார். அவர் மீது எனக்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது, எப்போதும் அவரது நலனை விரும்பும் முக்கிய நபர்களில் நானும் ஒருவனாக இருப்பேன்" என்றும் அவர் கூறினார்.

இதுவரை இந்திய அணிக்காக 10 டி20 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், அவற்றில் 3 வெற்றிகளையும், 6 தோல்விகளையும் பெற்றுத் தந்துள்ளார். ஒரு போட்டி முடிவு ஏதுமின்றி முடிவடைந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2017ஆம் ஆண்டு டெல்லியில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அன்றிலிருந்து இதுவரை 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 32.15 சராசரியிலும், 138.04 ஸ்டிரைக் ரேட்டிலும் 10 அரைசதங்கள் உட்பட 1415 ரன்கள் குவித்துள்ளார்.

அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 82 போட்டிகளில் விளையாடியுள்ள ஐயர், 45.44 சராசரியிலும் 97.84 ஸ்டிரைக் ரேட்டிலும் 24 அரைசதங்கள் மற்றும் 5 சதங்களுடன் 3136 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 36.86 சராசரியில் 811 ரன்கள் எடுத்துள்ளார்.