தேசிய அளவில் 3வது அணி உருவானால் ஸ்டாலின் பிரதமர் ஆவாரா?: அந்துமணி பதில்கள்!
தேசிய அளவில் மூன்றாவது அணி உருவானால், ஸ்டாலின் பிரதமர் ஆவாரா?
ஆங்கிலமும் தெரியாது; ஹிந்தியும் தெரியாது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு. மேலும், கரப்பான் பூச்சிகளை நம்பி காரியத்தில் இறங்கினால், தேசிய சிந்தனை அறவே போய்விடும்! பதவி ஆசைக்காக, ஸ்டாலினோ, அவர் கட்சியினரோ, அந்த தவறை செய்ய மாட்டார்கள்!
'வெற்றிப் பயணம்' திட்டத்தின் கீழ், புறநகர் பேருந்துகள், விரைவு பேருந்துகள், எல்.எஸ்.எஸ்., என்ற 'லிமிடெட் ஸ்டாப் சர்வீஸ்' பஸ்கள் மற்றும் 'டீலக்ஸ்' பஸ்களில், அக்., 2 முதல், பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்...' என, அரசு அறிவித்துள்ளதே?
பெண்களுக்கு இது, 'வெற்றிப் பயணம்' தான். அதுவும் புறநகர் - 'மொபசல்' பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்!
'முதல்வர் விஜய், சினிமாவில் ஹீரோ; அரசியலில் வில்லன்...' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறுகிறாரே?
அதாவது, அரசியலில் தினகரன் ஜோக்கர் போல இருக்கிறாரே... அப்படியா! விஜய், உண்மையிலேயே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் களமிறங்கி உள்ளார். ஆனால், அவருடன் நெருக்கமாக உள்ள சகாக்களை அவர், கண்காணிப்பு வளையத்தில் வைத்தால் தான், அவரின் உன்னதமான எண்ணம் நிறைவேறும்!
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த, நெசவுத் தொழிலாளியின் மூன்று மகன்கள், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, ஒரே நேரத்தில் மருத்துவக் கல்லுாரிகளில் படிக்க இடமும் கிடைத்துள்ளதே?
வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் என்ற அந்த மூன்று எதிர்காலத் துாண்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை! படிக்கும் ஆர்வமும், முயற்சியும் இருந்தால், எதுவும் சாத்தியமே என்பதை, காசு கொடுத்து பட்டதாரியாகும் சிலருக்கும், 'நீட்'டே வேண்டாம் என அரசியல் செய்யும் வஞ்சகர்களுக்கும் புரிய வைத்துள்ளனர், இந்த மூன்று சகோதரர்களும்!
முதல்வர் விஜய், அதிகாலை, 4:00 மணிக்கே எழுந்து, அமைச்சர்களுக்கு போன் செய்து, அந்தந்த துறைகளின், 'அப்டேட்' என்ன என்பதை கேட்பாராமே?
தி.மு.க.,வின் முன்னாள் தலைவர் கருணாநிதியும், முதல்வர் பதவி வகித்தபோது, இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டிருந்தார் என, அவரே சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அதை, முதல்வர் விஜய் இப்போது பின்பற்றுகிறார் போலும்!
' என்னையும் தான் கட்சியினர், வருங்கால பிரதமர் என்று கூறுகின்றனர். நான் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை' என, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளாரே?
தன் கட்சித் தலைவர் ராகுலுக்கு வேட்டு வைக்கும் வகையில், விஜயை பிரதமர் பதவிக்கு த.வெ.க.,வினர் முன்னிலைப்படுத்துவதால், வயிற்றிலிருந்து புகை கிளம்பி விட்டது, மாணிக்கத்துக்கு! அது இருக்கட்டும்... 'நானும் ரவுடி தான்' என்ற, 'ஜோக்' நினைவிற்கு வந்து விட்டது எனக்கு; உங்களுக்கும் தானே!!
'புதிய விமான நிலையம் அமைக்க, வேறு இடம் பரிசீலிக்கப்படும்...' என, அரசு கூறியுள்ள நிலையில், அதை கடற்கரை ஓரத்திலேயோ, கடலிலேயோ கூட அமைக்கலாமே?
நல்ல யோசனை! உலகில், ஆறு இடங்களில் கடற்கரையை ஒட்டியோ, கடலிலோ விமான நிலையம் உள்ளது. ஜப்பான், சமீபத்தில், கடலில் ஒரு விமான நிலையம் கட்டியுள்ளது!
'கூட்டணி கட்சிகள் இல்லையெனில், தி.மு.க., கட்சியால், 10 தொகுதிகள் கூட வென்றிருக்க முடியாது...' என, த.வெ.க., அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா கூறுகிறாரே?
சில காலம், தி.மு.க.,வில் இருந்தவர் அவர். அதனால், உண்மை நிலவரம் தெரிந்திருக்கும்!