தேர்தல் வாக்குறுதிகளில் சமரசம் செய்ய முயன்றால் பாஜ வேடிக்கை பார்க்காது: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
சென்னை: 'தி.மு.க., விட்டு சென்ற கடனை காரணம் காட்டி, தேர்தல் வாக்குறுதிகளில், முதல்வர் விஜய் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதை பா.ஜ., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சில தினங்களுக்கு முன், வெள்ளை அறிக்கை என்ற பெயரில், நிதி அமைச்சர் மரிய வில்சன், வெறும் கடன் பத்திரத்தை மட்டுமே வாசித்த நிலையில், த.வெ.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து, சட்டசபை உரையில், முதல்வர் விஜய் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
கடனை காரணம் காட்டி, கொடுத்த வாக்குறுதிகளை கிடப்பில் போடுவதற்கு திட்டம் தீட்டுகிறீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழகம் கடன் சுமையில் தவிக்கிறது என்று தெரிந்தும், திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம், மகளிருக்கு மாதம், 2,500 ரூபாய் என, இத்தனை வாக்குறுதிகளை எதற்கு வாரி இறைத்தீர்கள்.
மாற்றம் தருவோம் என, மேடைக்கு மேடை எதற்கு முழங்கினீர்கள். தி.மு.க., விட்டு சென்ற கடனை காரணம் காட்டி, தேர்தல் வாக்குறுதிகளில், முதல்வர் விஜய் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதை தமிழக பா.ஜ., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.