தேவ துாதர் முதல்வர் விஜய்; மாரியம்மன் ஜோதிமணி; காங்., போஸ்டரால் சர்ச்சை
கரூர்: 'கரூரில், 'கர்த்தரின் தேவதுாதர்' முதல்வர் விஜய்க்கு நன்றி' என, காங்கிரசார் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில், கோவில்களுக்கு சொந்தமான மொத்தம் 3,084 ஏக்கர் இனாம் நிலங்களில், பத்திரப்பதிவு தடையை நீக்கி, ஹிந்து சமய அறநிலைய துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறநிலைய துறை உத்தரவுக்கு நன்றி தெரிவித்து, கரூர் மாவட்ட இளைஞர் காங்., தலைவர் கீர்த்தன் பெரியசாமி பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில், 'கரூரில், 3,084 ஏக்கர் இனாம் நில பிரச்னையை தீர்த்து வைத்து, மக்களின் நீண்ட கால கனவை நனவாக்கிய, கர்த்தரின் தேவ துாதராகிய முதல்வர் ஜோசப் விஜய்; உறுதுணையாக நின்ற, கரூர் மக்கள் இதயங்களில் மாரியம்மனாக வாழும் எம்.பி., ஜோதிமணிக்கு நன்றி' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்து கோவில்களின் இடம் தொடர்பான பிரச்னையில், 'தேவதுாதர் விஜய்; மாரியம்மன் ஜோதிமணி' என ஹிந்து கடவுளை இழிவுபடுத்தியும், ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தியும் காங்கிரசார் போஸ்டர் ஒட்டியதால், சர்ச்சை எழுந்துள்ளது.