📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 16, 2026 01:33 AM

 தி.மு.க.,வின் பிம்பத்தை உடைத்த முதல்வர்!

 தி.மு.க.,வின் பிம்பத்தை உடைத்த முதல்வர்!

பி.என்.கபாலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபையில் முதல்வரின் பேச்சுகளும், அணுகுமுறையும் தவறானது; வெறும் வாய் சவடால் நிரம்பியது' என்கின்றனர், தி.மு.க.,வினர்.

சவால்களும், சவடால்களுமே சட்டசபை நிகழ்வுகள் என்ற நிலையை தோற்றுவித்ததே, திராவிட கட்சிகள் தானே!

அதனால், தி.மு.க.,வினரின் பேச்சு களுக்கு, அவர்கள் பாணியிலேயே முதல்வர் விஜய் பதிலடி கொடுத்தது மிகவும் சரியே!

முதல்வர் பேசுவதை முழுமையாக கேட்டு, பின் கருத்து கூறியிருக்கலாம், தி.மு.க.,வினர். அதைவிடுத்து, தங்கள் வண்டவாளங்கள் வெளியே வந்து விடும் என்று அஞ்சி, கூச்சல் போட்டு, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் நடந்து கொண்டுவிட்டனர்.

இதில், 'சர்க்காரியா கமிஷன் அறிக்கை, 'மிசா' குறித்து எல்லாம் சட்டசபையில் பேச வேண்டுமா?' என்று கேட்கின்றனர் சிலர்.

தங்களைப் பற்றி உயர்வான ஒரு பொய் பிம்பத்தை கட்டமைப்பதே, தி.மு.க.,வின் அரசியல் பாணியாக இருக்கும் போது, அந்த பிம்பத்தை உடைத்து, தமிழக மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் அல்லவா... அதைத் தான் முதல்வர் செய்துள்ளார்.

மேலும், 'சட்டசபையில் குற்றப்பத்திரிகை வாசிப்பதற்கு பதில், சட்ட நடவடிக்கை எடுக்கலாமே' என்கின்றனர்.

நீதிமன்றங்கள் தான் இறுதி புகலிடம் என்ற நம்பிக்கையே இன்று பொய்த்து வருகிறது.

சட்டத்தின் கண்ணில் மண்ணைத் துாவி, சாமர்த்தியமாக பல அயோக்கியத்தனங்களை செய்வதில் வல்லவர்களாக உள்ளனர், அரசியல்வாதிகள்.

அவர்கள் மீதான குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபித்து, தண்டனை வாங்கி தருவது மிகவும் கடினமாக உள்ள நிலையில், அரசியல் குற்றவாளிகளை நீதிமன்றங்களில் நிறுத்துவதை விட, மக்கள் மன்றங்களில் நிறுத்துவதே சரியானது.

எரிவதை பிடுங்கினால், கொதிப்பது தன்னால் அடங்கி விடும் என்பது போல், ஊழல்வாதிகளை வெளிச்சம் போட்டு காட்டினாலே போதும்; மக்கள் விழிப்படைந்து, அவர்களை புறக்கணிக்க துவங்கி விடுவர்.

அவ்வகையில், தி.மு.க., குறித்த முதல்வர் பேச்சும், அணுகுமுறையும் சரியே!

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உயர் நீதிமன்றத்தில், தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்று, சட்டசபையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2006 டிச., 6ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் இதேபோன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துவிட்டது.

இந்நிலையில், 'உயர் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தமிழக அரசின் தீர்மானம் நிறைவேற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார், முதல்வர் விஜய்.

மேலும், 'வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் தான் எளிதில் புரியும்; மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது' என்றும் கூறியுள்ளார்.

கீழமை நீதிமன்றங்களோடு உயர் நீதிமன்றத்தை ஒப்பிட முடியாது. உயர் நீதிமன்றத்தில் பணியில் இருக்கும், 66 நீதிபதிகளில் தமிழில் பேச தெரிந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்?

என்னதான் மொழி பெயர்ப்பு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், குளறுபடிகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

பொதுவாகவே, தமிழக அரசியல்வாதிகள், தமிழ் மொழி மீது தங்களுக்கு தீராத காதல் இருப்பதுபோல நாடகம் ஆடுவதில் கில்லாடிகள். ஆனால், அவர்கள் நடத்தும் ஆங்கிலப் பள்ளிகளில், தமிழில் பேசினாலே அபராதம் விதிக்கப்படும். இதுதான் இவர்கள் தமிழை வளர்க்கும் லட்சணம்!

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தனியாக டியூஷன் வைத்து தமிழ் கற்றுக் கொடுக்கின்றனர்.

தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி நடத்தி அவர்களை ஊக்குவிக்கின்றனர்.

கடல் கடந்தும் தமிழை நேசிக்கும் இவர்கள் அல்லவா உண்மையான தமிழ்ப் பற்றாளர்கள்!

அந்த பிள்ளைகளின் தமிழ் உச்சரிப்பு, தமிழக மாணவர்களை விட சிறப்பாக இருப்பதுதான் இதில் ஆச்சர்யமான விஷயம்!

த.வெ.க., அரசுக்கு உண்மையிலேயே தமிழ் மொழி மீது பற்று இருந்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், ஆரம்பக் கல்வி, தமிழ் மொழியில்தான் பயில வேண்டும்; தமிழ்மொழியை இழிவு படுத்தும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட வேண்டும்.

இதுதான், உண்மையிலேயே தமிழுக்கு செய்யும் தொண்டு!

அதைவிடுத்து, உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகிவிட்டால் மட்டும் தமிழின் பெருமை உயர்ந்துவிடப் போவதும் இல்லை; குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துவிடப் போவதும் இல்லை!

கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு, ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பரிசளித்து, தமிழ் நெஞ்சங்களை குளிர்வித்துள்ளார், பிரதமர் மோடி.

பொதுவாக, தமிழக அரசியல்வாதிகள், அரசியல் லாபத்துக்காக, அவ்வ ப்போது, 'தமிழ்... தமிழ்' என்று கூச்சல் இடுவதோடு, அவர்களது தமிழ் மொழி பற்றும், கடமையும் முடிந்து விடுகிறது.

ஆனால், வேற்று மாநிலத்தைச் சேர்ந்த நம் பிரதமர் மோடியோ, உலகின் எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும், திருக்குறள், அகநானுாறு, புறநானுாறு நுால்களை மேற்கோள் காட்டி பேசுகிறார்; திருக்குறளை அந்நாட்டு அதிபருக்கோ, பிரதமருக்கோ பரிசளித்து மகிழ்கிறார்.

இதன் வாயிலாக, அந்நாட்டு மக்களுக்கு திருக்குறள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலை துாண்டுகிறார்.

இந்த மகத்தான பணியை அவர், ஓட்டு வங்கி அரசியலுக்காக செய்வதில்லை... திருக்குறளில் உள்ள மேன்மையான கருத்துக்களை அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான், இப்படி ஒவ்வொரு முறையும் வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போது அந்நுாலை கொடுக்கிறார்.

ஆனால், திருக்குறளை, 'தங்கத் தட்டில் வைத்த மலம்' என்று கூறிய கூட்டத்தின் வழி வந்தவர்கள், தமிழர்களின் ஓட்டுக்காக பிரதமர் மோடி நாடகம் போடுவதாக கூறுகின்றனர்.

அறநெறிகளை வழியுறுத்தும் திருக்குறளை, அறத்தின் வழியில் வாழ்க்கை நடத்தும் மோடி உலகெங்கும் கொண்டு செல்ல நினைக்கிறார்; அதர்மத்தையே அறம் என நினைத்து செயல்படுவோருக்கு, பிரதமரின் செயல் கசக்கத் தானே செய்யும்?