தலையால் முட்டிக் கொண்டு மோதிய ஜெய்ஸ்வால்
தலையால் முட்டிக் கொண்டு மோதிய ஜெய்ஸ்வால் - அசிதா-வுக்கு தண்டனை.. ஐசிசி அறிவிப்பு.. அபராதம் விதிப்பு
கொழும்பு: கொழும்பு டெஸ்ட் போட்டியின் போது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட இந்திய தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. மேலும், அவரோடு மோதிய அசிதா பெர்னாண்டோவிற்கும் ஐசிசி தண்டனை வழங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் 17 வது ஓவரில் அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன பிறகு, இருவருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டது. அப்போது பெர்னாண்டோ தனது தலையை ஜெய்ஸ்வாலை நோக்கி நகர்த்தினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜெய்ஸ்வாலும் தலையை சாய்க்க, இறுதியில் இருவரது தலைகளும் நேருக்கு நேர் முட்டிக்கொண்டன.
இந்த அநாகரிகமான செயல்பாடு ஐசிசி நடத்தை விதிமுறைகளின் கீழ் லெவல் 1 பிரிவின் கீழ் வரும் பிரிவு 2.12 ஐ மீறியதாகக் கண்டறியப்பட்டது. ஐசிசி நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.12 என்பது, சர்வதேச போட்டியின் போது சக வீரர்கள், நடுவர்கள் அல்லது போட்டி நடுவர் ஆகியோரிடம் அநாகரிகமான முறையில் உடல்ரீதியான தொடுதல்களை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது.
இதன் அடிப்படையில், ஜெய்ஸ்வால் மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் தங்களது போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இருவரது ஒழுங்குமுறை கணக்கிலும் தலா 1 டீமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் விதித்த இந்தத் தண்டனையை இரு வீரர்களும் ஒப்புக்கொண்டதால் முறையான விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து கள நடுவர்கள் அஹ்சன் ரசா, ஷர்புத்துல்லா இப்னே ஷாஹித், மூன்றாவது நடுவர் ராட் டக்கர் மற்றும் நான்காவது நடுவர் பிரகீத் ரம்புக்வெல்லா ஆகியோர் புகார் அளித்திருந்தனர். பொதுவாக ஐசிசி விதிமுறைகளின் லெவல் 1 குற்றங்களுக்கு குறைந்தபட்சமாக அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும், அதிகபட்சமாக 50 சதவீதம் வரை அபராதமும், 1 அல்லது 2 டெமரிட் புள்ளிகளும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசியின் இந்த நடவடிக்கைக்கு முன்னதாக ஜெய்ஸ்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே வெளியிட்ட வீடியோவின் கீழ் கமெண்ட் செய்துள்ள ஜெய்ஸ்வால், "அசிதா பெர்னாண்டோ என்ன பேசினார் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் தயவுசெய்து தீர்ப்பு எழுதாதீர்கள். யாராவது எல்லையைத் தாண்டினால் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இந்த புதிய இந்தியா எப்போதும் எதிர்த்துப் போராடி தகுந்த பதிலடி கொடுக்கும்" என்று ஆக்ரோஷமாகப் பதிவிட்டுள்ளார்.