தமிழ் இளையர் விழா: தமிழ்க் குரல் மூலம் தமிழ் அடையாளத்தைப் பேணுதல்
தமிழ் இளையர் விழாவை முன்னிட்டு தமிழ் மொழி, கலாசாரம், அடையாளம் ஆகியவற்றை இளையர்கள் வெளிப்படுத்த ஊக்குவிக்கும் நோக்கில் ‘தமிழ்க் குரல் - மெய்யுரு இளையர்’ என்னும் நிகழ்ச்சி அரங்கேறியது.
இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகம், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி, வளர்தமிழ் இயக்கம் ஆகியவற்றால் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டு, செப்டம்பர் 11ஆம் தேதி நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பாடல்கள் பாடி, பல்வேறு வகையான நடனங்களை ஆடி இளையர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதன் முக்கிய அங்கமாக, இந்திய இளையர் ஒருவர் தமது தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்துவதில் எதிர்நோக்கும் சவால்களைச் சித்திரிக்கும் நாடகம் படைக்கப்பட்டது.
இதில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவி லலிதப்ரியா சித்திரித்த பாரதியார் உட்பட பல கதாபாத்திரங்கள் மேடையேற்றப்பட்டன.
“பாரதியார் கதாபாத்திரத்திற்காக என்னைத் தயார்படுத்திக்கொள்ள, ஓர் ஆண் குரலைப் போன்று எனது குரலையும் ஆழமானதாக மாற்ற நான் பயிற்சிபெற வேண்டியிருந்தது. மேலும், தமிழ்மொழியின்மீது பெருமைகொண்ட, தன்னம்பிக்கைமிக்க ஒரு தமிழ்க் கவிஞராக என்னை நான் வெளிப்படுத்திக்கொண்டேன். இக்கால இளையர்கள் தமிழ்ப் பண்பாட்டைத் தழுவி ஏற்கவும், தமிழ்மொழியைப் பேசவும் வலியுறுத்துவது என் கதாபாத்திரத்தின் நோக்கமாக இருந்தது,” என்றார் லலிதப்ரியா.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கின. ஏற்பாட்டுக் குழுவிற்கு 18 வயது மாணவி கார்த்திகை பாபு பிரித்தா தலைமையேற்றார். நிகழ்ச்சியின் பல்வேறு அங்கங்களைத் தயார்செய்ய மற்ற இந்திய மாணவர்களுடன் இணைந்து அவர் பணியாற்றினார்.
“தமிழ்க் குரல் - மெய்யுரு இளையர்’ நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவுசெய்தனர். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று பிரித்தா கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையர்களில் ஒருவரான முரளி கார்த்திக், 20, இதுபோன்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“இளைய தலைமுறையினரிடம் தங்கள் அடையாளத்தின் மீதான பெருமிதத்தை விதைக்க இத்தகைய கலை நிகழ்ச்சி அவசியமானது. வருங்காலங்களிலும் இதுபோன்ற கலை சார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்று நம்புகிறேன்,” என்று அவர் சொன்னார்.