தமிழ் மொழி & தமிழ் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா
சென்னை: பிரபல தமிழ் பட்டிமன்ற பேச்சாளரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவிற்கு தமிழக ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
ஆளுனர் அர்லேகர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, "பிரபல தமிழ் பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழறிஞரும், தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் சிறந்த பேச்சாளருமான திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமது சிறப்பான பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் ஆழ்ந்த தமிழ் அறிவின் மூலம் பொதுமக்களின் சிந்தனையை வளப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பை பல தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் திரு. சாலமன் பாப்பையா.
இப்படிப்பட்ட அன்னாரின் மறைவு தமிழ் இலக்கிய மற்றும் பண்பாட்டு உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினர், உறவினர்கள், அபிமானிகள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.