தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் ஒலிக்கும்.. முதல்வரின் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்
இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
ராஜ்மோகன் பேச்சு
இந்த தீர்மானத்தின் மீது பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில்,
தாயே தமிழே வணக்கம். தாய்ப் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும். உலகில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய் மொழியில் பெயர் வைப்பார்கள். ஆனால் தாய் மொழியையே பெயராக வைக்கக்கூடிய கூட்டம் இந்த தமிழ் கூட்டம்.
தமிழரசன், தமிழழகன், தமிழழகி என மொழியின் பெயரையே தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து அழகுப் பார்க்கக்கூடிய கூட்டம் நம் தமிழ்க்கூட்டம். இந்த கூட்டம் தமிழ் தாயை வாழ்த்தும் பாடல் தான் தமிழ்த்தாய் வாழ்த்து.
ஆனால் இது தமிழ்த்தாய்க்கான வாழ்த்து மட்டுமல்ல. இந்த பூமித்தாயை வாழ்த்தும் வாழ்த்து. இந்த நிலம், நிலத்தை சுற்றி கடல், அந்த நீல நிற கடலை புடவையாக சுற்றியிருக்கிறாளாம் பூமித்தாய். 'நீராரும் கடலுடுத்த நிலமடந்தை'. அந்த பூமித்தாய்க்கு ஒரு அழகான முகம். 'சீராரும் வதனமென' வதனம் என்றால் முகம். அந்த சீராரும் வதனம் எதுவென்று பார்த்தால் அது 'திகழ்பரத கண்டமெனில்' இந்த பூமித்தாயின் முகம் பாரதத்தாய், அவளுக்கு சிறு பிறை போன்ற நெற்றி, அது இந்த தென்னிந்தியா, அந்த நெற்றிக்கு அழகு அதில் வைக்கிற ஒரு பொட்டு.
அது இந்த தமிழ்நாடு என்கிற தாய். அந்த பொட்டு நெற்றிக்கு மட்டுமா, அது வாசமும் தருகிறது. எட்டுத் திக்கும் மணமாக வீசுகிறது. அப்படி எட்டுத் திக்கும் புகழோடு இருப்பவள் தமிழ்த் தாய். இத்தனை காலங்கள் இருந்தால் தாய்க்கு வயதாகும் தானே.
உலகத் தாய் வாழ்த்து
இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்துகிறேன். இனி பொது நிகழ்ச்சிகளில், கல்வி நிலையங்களில், எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதலில் ஒலிக்கும். அதற்காக தீர்மானம் நிறைவேற்றியவர் என்ற சரித்திரத்தில் முதல்வரின் பெயரே நிலைக்கும். அவரை வாழ்த்தி இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.