தூய்மைப் பணியாளர் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறட்டும்!
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்துவரும் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாள்களாக முன்னெடுத்த போராட்டம், தமிழக அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட சில வாக்குறுதிகளை ஏற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் பொதுச் சுகாதாரப் பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள், அதிகாலை 4 மணிக்கே தங்கள் பணி இடங்களைச் சென்றடைந்து வேலையைத் தொடங்குகின்றனர். ஆனால், பணி இடங்களுக்குச் செல்ல அவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து தரப்படுவதில்லை.
தொற்றுநோய்கள், கையாளும் ஆபத்தான பொருள்களில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளக் கையுறை, முகக்கவசம் முதலான பாதுகாப்புக் கருவிகளும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
பணிக் கால வார விடுமுறை, பண்டிகை விடுமுறைகள் சரிவர வழங்கப்படுவதில்லை; மகப்பேறு, நோய் விடுப்புகளைப் பெறும் உரிமைகள்கூட இதுவரை அவர்களுக்கு உறுதி செய்யப்படவில்லை.