டி20 மட்டுமல்ல.. டெஸ்டிலும் நான் கில்லி தான்.. துலீப் கோப்பையில் சதம் விளாசிய 23 வயதான MI வீரர்
டி20 மட்டுமல்ல.. டெஸ்டிலும் நான் கில்லி தான்.. துலீப் கோப்பையில் சதம் விளாசிய 23 வயதான MI வீரர்
பெங்களூரு: துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியின் இரண்டாவது நாளில், தெற்கு மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா நெருக்கடியான சூழ்நிலையிலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். வடக்கு மண்டல அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில், வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராரின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
முன்னதாக, வடக்கு மண்டல அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 195 ரன்களுக்குப் பதிலடியாக களமிறங்கிய தெற்கு மண்டல அணி, 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய 23 வயதான இடதுகை பேட்ஸ்மேன் திலக் வர்மா, ஸ்ரேயாஸ் கோபாலுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இருவரும் இணைந்து 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றினர். அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் 88 ரன்கள் எடுத்திருந்த போது ஷ்ரேயாஸ் கோபால் ஆட்டமிழந்தார். எனினும், மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய திலக் வர்மா 219 பந்துகளில் தனது சதத்தை எட்டினார்.
பிரார் வீசிய பந்தை தனது பேடில் இருந்து லாவகமாக திசை திருப்பி பவுண்டரிக்கு விரட்டி, முதல்தர கிரிக்கெட்டில் தனது எட்டாவது சதத்தை திலக் வர்மா பதிவு செய்தார். இந்த மைல்கல்லை எட்டியதும் திலக் வர்மா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், ஓய்வறையில் இருந்த அவரது சக வீரர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர்.
வடக்கு மண்டல அணியின் கடுமையான பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடிய திலக் வர்மாவின் இந்த நிதானமான சதம், தெற்கு மண்டல அணியின் சரிவைத் தடுத்து, 90 ரன்கள் முன்னிலை பெற உதவியுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், தெற்கு மண்டல அணி 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. திலக் வர்மா 106 ரன்களுடனும், காவூரி சாய் தேஜா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.