டி20 போட்டியாக மாறிய டெஸ்ட்.. சிராஜ் ஓவரில் வெளுத்து வாங்கிய வைபவ் சூர்யவன்ஷி.. 10 ஓவரில் 70 ரன்கள்
டி20 போட்டியாக மாறிய டெஸ்ட்.. சிராஜ் ஓவரில் வெளுத்து வாங்கிய வைபவ் சூர்யவன்ஷி.. 10 ஓவரில் 70 ரன்கள்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய 2026 துலிப் டிராபி இறுதிப் போட்டியில், தென் மண்டலம் மற்றும் கிழக்கு மண்டல அணிகள் மோதி வருகின்றன. 4 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
கிழக்கு மண்டல அணிக்கு துவக்க வீரர்களாக களம் இறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அனுபவ வீரர் அபிமன்யு ஈஸ்வரன் ஜோடி அதிரடியில் மிரட்டியது. வழக்கமாக நிதானமாக ஆடும் வழக்கம் கொண்ட ஈஸ்வரனும் இன்று அதிரடியாக ரன் சேர்த்தார். இந்த ஜோடி தென் மண்டல பந்துவீச்சை துவம்சம் செய்து, முதல் 10 ஓவர்களிலேயே 70 ரன்கள் குவித்து டி20 ஆட்டம் போல ஆட்டத்தை மாற்றியது.
தென் மண்டல அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜின் பந்துவீச்சிலும் வைபவ் சூர்யவன்ஷி ரன் குவிக்கத் தவறவில்லை. சிராஜ் வீசிய 7-வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை பறக்கவிட்டு வைபவ் மிரள வைத்தார். எனினும், அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது, தென் மண்டல வேகப்பந்து வீச்சாளர் மிலிந்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அதிரடியை தொடர்ந்த அபிமன்யு ஈஸ்வரன் 100 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்தார். ஆட்டத்தின் 16 ஓவர்கள் முடிவில் கிழக்கு மண்டல அணி 1 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இறுதிப் போட்டியின் முதல் நாளிலேயே கிழக்கு மண்டல அணிக்கு இந்த ஜோடி அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.