“விடைபெறுகிறேன்”.. ஓய்வை அறிவித்தார் முன்னாள் இந்திய கேப்டன் அஜின்கியா ரஹானே.. நெகிழ்ச்சி வீடியோ
“விடைபெறுகிறேன்”.. ஓய்வை அறிவித்தார் முன்னாள் இந்திய கேப்டன் அஜின்கியா ரஹானே.. நெகிழ்ச்சி வீடியோ
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பேட்ஸ்மேனும், முன்னாள் டெஸ்ட் அணி கேப்டனுமான அஜின்கியா ரஹானே, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக இன்று (ஜூலை 30) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது 38 வயதாகும் ரஹானே, கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவர் இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2023-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது இந்தியாவின் சார்பில் தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார்.
சமீபத்தில் நடைபெற்ற 2026 மும்பை டி20 லீக் தொடரில் நார்த் மும்பை பாந்தர்ஸ் அணியின் கேப்டனாக விளையாடியதே இவரது கடைசி கிரிக்கெட் போட்டியாகும்.
இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆடிய ரஹானே, 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் உட்பட 5077 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 38.46 ஆகும். ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 24 அரைசதங்களுடன் 2962 ரன்களும், 20 சர்வதேச டி20 போட்டிகளில் 375 ரன்களும் எடுத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உணர்வுபூர்வமாகப் பேசிய ரஹானே, "வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உள்ளது. அதை மதித்து நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். டோம்பிவிலியில் இருந்து ரயிலில் பயணித்து கிரிக்கெட் பழகிய சிறுவன் முதல், இந்திய தொப்பியை அணிந்தது வரை எல்லாவற்றையும் என் நாட்டிற்காகவும் அணிக்காகவும் நேர்மையாகச் செய்தேன். இந்திய கிரிக்கெட்டின் கடந்த 20 ஆண்டுகால வளர்ச்சியில் நானும் ஒரு பகுதியாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும், அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் தொடர்ந்து கிரிக்கெட்டுடன் இணைந்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பிசிசிஐ, எம்சிஏ, சக வீரர்கள், ஐபிஎல் நிர்வாகங்கள் மற்றும் தனது மனைவி ராதிகா உட்பட குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். "இந்திய டெஸ்ட் தொப்பி எண் 278 விடைபெறுகிறது" என்று அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.