📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 31, 2026 06:04 PM

“50 வருடத்தில் படுமோசமான பாகிஸ்தான் டீம்

“50 வருடத்தில் படுமோசமான பாகிஸ்தான் டீம்

“50 வருடத்தில் படுமோசமான பாகிஸ்தான் டீம்-ன்னு சொல்றீங்களே அப்போ..”.. ரஷித் லத்தீப் விளாசல்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் அதன் தற்போதைய தலைவர் மோசின் நக்வியையும் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்க்ஸ்களில் ஆடிய பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களைத் தாண்டவில்லை. கேப்டன் பாபர் அசாம் முதல் போட்டியில் விளையாடாத நிலையில், இரண்டாவது போட்டியில் களம் இறங்கி 8 மற்றும் 6 ரன்களில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். 2-வது இன்னிங்ஸில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் அவர் அவுட் ஆன விதம் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த மோசமான ஆட்டத்தை பிரிட்டன் ஊடகங்கள் 'கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாகிஸ்தான் அணி' என்று விமர்சித்துள்ளன.

இதற்கு பதிலளித்த ரஷித் லத்தீப், "பாகிஸ்தான் அணியை மட்டும் அனைவரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை என்பதை யாரும் பேசுவதில்லை. அதேபோல், மோசமான தேர்வு குழு மற்றும் பயிற்சியாளர்கள் குறித்தும் யாரும் கேள்வி எழுப்புவதில்லை. இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துள்ளனர். நாம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறோம்" என்று கொந்தளித்துள்ளார். அவரது இந்த கடுமையான கருத்துக்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளில் ஆடிய கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்கள் முன்பு வங்கதேச அணியிடமும் பாகிஸ்தான் டெஸ்ட் அணி தோல்வி அடைந்து இருந்தது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இடையே இம்ரான் கானின் மகன்கள் அளித்த பேட்டியை ஸ்கை ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பியதால், போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அணி மிரட்டியதாக சர்ச்சை எழுந்தது. எனினும், இந்த செய்திகளை கேப்டன் பாபரும், பயிற்சியாளர் சர்பராஸும் மறுத்துள்ளனர். இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9 அன்று பர்மிங்காமில் தொடங்க உள்ளது.