அமெரிக்க விசா நேர்காணல்கள் தற்காலிக நிறுத்தம்; 2 லட்சம் பேரின் விசா ரத்து?
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களில் விசா நேர்காணல்களை டிரம்ப் நிர்வாகம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. தூதரக அதிகாரிகளுக்கான புதிய உலகளாவிய பயிற்சி திட்டத்திற்காக நேர்காணல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பொது நலத்திட்ட உதவிகளை சார்ந்து வாழ வாய்ப்புள்ள விசா விண்ணப்பதாரர்களை துல்லியமாக கண்டறிவதே பயிற்சியின் முக்கிய நோக்கமாகும். விசா நடைமுறைகளை கடுமையாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம், துணை தூதரகங்களில் விசா நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு வேறொரு தேதியில் நேர்காணல் நடைபெறும் என மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும் அமெரிக்காவில் சுற்றுலா மற்றும் வணிக விசாவில் வந்து அடைக்கலம் கோரிய 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாவை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2016 முதல் 2026 வரை பி1, பி2 விசா பெற்று அடைக்கலம் கோரியவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய விசா ரத்து நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
அமெரிக்காவில் உயர்தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான புதிய எச்-1பி விசா விண்ணப்பக் கட்டணத்தை ரூ.99 லட்சம்வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும். வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்துவதைக் கட்டுப்படுத்தவும் இக்கட்டண உயர்வை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.