"அவைக்குள் செல்போன் பயன்படுத்தாதீங்க"
``நிறைய மாற்றி இருக்கிறீர்கள்; ஒன்றிய அரசு என்பதையும் மத்திய அரசு என மாற்றிக் கொடுங்கள்" - பாஜக MLA போஜராஜன் | Live
தமிழ்நாடு சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தெரிந்துகொள்ளுங்கள்.
``பாஜக வேண்டாமென்றால் நீங்கள் வேறு தேசத்துக்குதான் போக வேண்டும். எதிர்மறையாக எதுவும் பேச வேண்டாம். காங்கிரஸூக்கும் அதையே சொல்லிக் கொள்கிறேன்." மத்தியில் காங்கிரஸ்-பாஜக இல்லாத ஆட்சி அமைய வேண்டுமென மன்னார்குடி எம்.எல்.ஏ பேசியதற்கு பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் பதில்.
மேலும் தொடர்ந்த பாஜக எம்.எல்.ஏ போஜராஜன், ``தீபாவளி, பொங்கல் போல முதல்வர் வேட்டி சட்டையில் அவைக்கு வந்தது அழகாக இருந்தது. இன்றும் அவர் அப்படி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்."
அமைச்சர் ராஜ்மோகன்: ``தமிழ், தமிழர் பண்பாட்டில் ஊறியவர் முதல்வர். கோட் போட்டுக் கொண்டுதான் பாரதியாரே தமிழை வளர்த்தார். அதனால் தமிழர் பண்பாடு என்பது ஆடையில் மட்டுமில்லை. செயலில் இருக்கிறது." என்றார்,
பாஜக எம்.எல்.ஏ போஜராஜன், ``நீங்கள் பல திட்டங்களின் பெயரை மாற்றியிருக்கிறீர்கள். அதே மாதிரி ஒன்றிய அரசு என்பதையும் மத்திய அரசு என மாற்றிக் கொடுங்கள்." என்றார்.
`முதல்வருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்'
மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் ``தமிழ்த்தாய் வாழ்த்து உரிமையை நமக்கு நிலைநிறுத்திய முதல்வருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற பெயரில் நெல், கரும்பு ஊக்கத்தொகைக்காக இன்னொரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!
இவர்களெல்லாம் உங்களை எதிர்த்து வாக்களித்தவர்கள். நான் உங்களை ஆதரித்து வாக்களித்தவன். நான் கேட்கிறேன். சிறு, குறு விவசாயிகளின் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யுங்கள். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவியுங்கள். காலமுள்ள வரை நீங்கள்தான் முதல்வராக இருப்பீர்கள்.
கர்நாடகாவிலும் மத்தியிலும் பாஜக, காங்கிரஸ் இல்லாத ஒரு அரசு அமைய வேண்டும். " என்றார்,.
`குறைவாகத்தான் கடன் வாங்கியிருக்கிறோம்!'
முன்னாள் அமைச்சர் காமராஜ், ``தவெக அரசின் முதல் பட்ஜெட் ஏமாற்றத்துக்குரிய பட்ஜெட். வெறும் பெயர் சூட்டுவிழாவுக்கான பட்ஜெட்டாகவே இருந்தது. மகளிர் பயணம், மகளிர் உரிமைத் தொகை உயர்வு, மாற்றுத்திறனாளி உதவித் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான உதவித்தொகை என தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.
நிதியமைச்சர் இன்னமும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கேட்கிறார். ஆனால், நிதித்துறை செயலாளர் இன்னும் 50 ஆண்டுகள் ஆகினாலும் கடனை குறைக்க முடியாது என்கிறார்." என்றார்,
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், ``நாங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 436 திட்டங்களில் 125 திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துவிட்டோம்.
திமுகவோடு அதிக கடனை பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், ஜி.எஸ்.டி வரி வருவாய் விகிதப்படி பார்த்தால் நாங்கள் அவர்களை விட 0.03 சதவீதம் குறைவாகத்தான் கடன் வாங்கியிருக்கிறோம்." என்றார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தீர்மானம் - முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தீர்மானம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி
``தமிழ்த்தாய் வாழ்த்தை அவசியம் முன்னதாக பாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
ஆனால் எங்களின் முதலமைச்சர் எல்லா நிகழ்ச்சிகளிலும் தங்களின் சொந்த குரலிலேயே பாட வேண்டும் என்று கொண்டு வந்தார்.
இன்று கொண்டு வந்திருக்கும் தீர்மானம் ஆளுநர் அல்லது மற்றவர்களின் கட்டுக்குள் இருக்கிறதா என்று சந்தேகம் எழுகிறது.
ஒன்றிய அரசு என்றாலே இந்த தவெக அரசு பயப்படுகிறது.
சட்ட பூர்வமாக இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதற்கு தவெக அரசு மவுனமாக இருந்தது.
சட்டம் என்பது வேறு, தீர்மானம் என்பது வேறு.
தீர்மானம் என்பதை யார் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். சட்ட பூர்வ அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அரசு அங்கீகாரத்தை பெற முயற்சிக்க வேண்டும்." என்றார்.
சட்டமன்றத்தில் பிரேக் வேண்டும்!
தமிமுன் அன்சாரி, ``நான் இப்போது பேசும்போது மணி மதியம் 1:40 ஆகிறது. பசி, சோர்வு காரணமாக பல உறுப்பினர்கள் அவையில் இல்லை. அவை மூன்று மணிக்கு முடியுமா நான்கு மணிக்கு முடியுமா என பலரும் மனச்சோர்வில் இருக்கிறார்கள். அதனால் பள்ளிகளை போல இங்கேயும் பிரேக் விடும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். மதியம் 1:30 மணி வரை அவையை நடத்திவிட்டு ஒரு இடைவேளை விட்டு மாலை 5 மணிக்கு மீண்டும் அவையை கூட்டலாம்." என்றார்.
மேலும் அவர், ``வட்ட வடிவிலான புதிய சட்டமன்றத்தை கட்ட வேண்டும். சட்டமன்ற விடுதி வளாகத்தில் இருக்கும் மைதானத்திலோ, தீவுத்திடலிலோ புதிய சட்டமன்றக் கட்டடத்தை அமைக்கலாம்." என்றார்.
தொடர்ந்து நீட் எதிர்ப்பு குறித்து, ``இங்கே இருக்கும் கட்சிகளில் ஒரு கட்சியை தவிர மற்ற கட்சிகளெல்லாம் நீட் தேர்வை எதிர்க்கிறோம். இந்த அரசும் எதிர்க்கிறது. ஆனால், திராவிடக் கழகம் சார்பில் நீட் எதிர்ப்பு பரப்புரைக்கு திட்டமிட்ட போது காவல்துறை அதை தடுக்கிறது." என்றார்.
`இது சரியாக இருக்கும் வரை நம்முடைய ஆட்சி தொடரும் என்று எம்.ஜி.ஆர் கூறினார்'
சபாநாயகர் ஜே.சி.டி பிராபகர், ``1984 பிப்ரவரி 12 ஆம் தேதி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் காரில் போய்க் கொண்டிருந்தேன். மேற்கு கே.கே.நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தோம். இதுவும் என்னுடைய வில்லிவாக்கம் தொகுதிதான் என்றேன். உடனே அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்றார். உள்ளே சென்று ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்து கடையை முறையாக திறக்கிறார்களா என்று மக்களிடம் கேட்டார். 'சரியாக திறக்கிறார்கள்' என்று மக்கள் கூறினர்.
இது சரியாக இருக்கும் வரை நம்முடைய ஆட்சி தொடரும் என்று எம்.ஜி.ஆர் கூறினார்.
அதேமாதிரி, மத்திய தொகுப்பில் அரிசி குறைக்கப்பட்ட போது எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அதிகாரிகள் வந்து பேசி தமிழகத்துக்கான தொகுப்பை விடுவித்த பிறகுதான் எம்.ஜி.ஆர் போராட்டத்தை கைவிட்டார்." என்றார்.
`5 வருசம் ஆட்சியில் இருந்தவர்கள், 3 மாதமாக ஆட்சியில் இருப்பவர்களை ஒப்பிட்டு பேசுகிறார்கள்!" -ஆதவ்
அமைச்சர் ஆதவ், ``5 வருசம் ஆட்சியில் இருந்தவர்கள், 3 மாதமாக ஆட்சியில் இருப்பவர்களை ஒப்பிட்டு பேசுகிறார்கள். தாங்கள்தான் அடுத்து ஆட்சியமைப்போம் என திமுக நம்பியது.
எங்கள் முதல்வரின் முதல் காலடி பட்டது பரந்தூர் மண்ணில்தான். என்னுடைய வாழ்க்கை விவசாயிகளுக்குதான் என எங்கள் முதல்வர் அறிவித்தார். நாங்கள் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வோம் என அறிவித்தோம். 5,900 கோடியை தள்ளுபடியும் செய்திருக்கிறோம்.
ஆனால், வெல்வோம் என நம்பிக் கொண்டிருந்த திமுக தங்கள் தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி பற்றி பேசவே இல்லை. ஆட்சிக்கு வந்திருந்தாலும் கடன் தள்ளுபடியை செய்திருக்கமாட்டார்கள். ஆனால், எங்கள் தலைவருக்கு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என எண்ணம் இருக்கிறது. எங்கள் தலைவர் சொல் அல்ல செயல் மட்டுமே.
வரப்போகும் 5 வருடமும் விவசாயிகளுக்கான பொற்கால ஆட்சியாக இருக்கும்." என்றார்.
எம்.ஆர்.கேவுக்கு அமைச்சர் ரமேஷ் பதில்
``விவசாயிகள் கடந்த ஆட்சியில் சுகமாக இருந்ததை போல ஒரு திரைக்கதையை முன்னாள் அமைச்சர் பேசுகிறார்.
309 கோடிக்கு நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பேன் என்றீர்களே... அதெல்லாம் எங்கே?
விவசாயிகள் பற்றி பேசும் போதும் நெற் பயிருக்குள் கான்க்ரீட் போட்டு நடந்தாரே... அந்த விவசாயியை பற்றி பேச மறந்துவிட்டீர்கள்.
நீங்கள் சொல்கிற கதையெல்லாம் சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது. சாக்கை கரையான் தின்றுவிட்டது என்பதைப் போல இருக்கிறது."
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் : ``அமைச்சர் பேசும்போதுதான் தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது என்று தெரிகிறது. உண்மையா பொய்யா என்றே தெரியாமல் டெக்னிக்காக பேசுகிறார்.."
ரமேஷ் : ``10 நிமிடத்திற்கு முன் அண்ணனிடம்தான் கற்றுக்கொண்டேன்" (எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடம்....)
(முதல்வர் ரசித்து சிரிக்கிறார்.)
21,000 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு 10000 கோடி ரூபாய்தான் தள்ளுபடி!
திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ``1996 இல் கலைஞர் 7000 கோடி கடனை விவசாயிகளுக்காக தள்ளுபடி செய்தது. கடந்த ஆட்சியில் 19600 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்திருக்கிறோம்.
தவெக அரசு 21,000 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு 10000 கோடி ரூபாய்தான் தள்ளுபடி செய்திருக்கிறது." என்றார்,
அமைச்சர் ஆனந்த் vs எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ``மாற்றம்...மாற்றம் என்று சொன்னார்கள். வேளாண் பட்ஜெட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
திமுக பேசிப் பேசி வளர்ந்த இயக்கம். எங்களை பார்த்து பேப்பர் படிக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்...நாங்கள் ஆட்சியில் இருந்த போது காலை 8 மணி வரைக்கும் அவ்வளவு டென்ஶனாக இருக்கும். பேப்பரில் மக்கள் பிரச்னைகளை பார்த்துவிட்டு அதிகாரிகள் மூலம் முதல்வர் எங்களை தொடர்புகொண்டு என்னவென்று கேட்பார். அதனால் 5 ஆண்டுகளும் டென்ஷனாகவே இருந்தோம். ஆனால், நீங்களெல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்களே... (தவெகவினரை நோக்கி..)
அமைச்சர் ஆனந்த் : ``சின்ன வாய்க்கால் பிரச்னை என்றாலும் அது சரியாகிவிட்டதா என உடனே போன் போட்டு கேட்கக் கூடிய முதல்வர் இவர். உங்களுக்காகவாது 5 ஆண்டுகள்தான் டென்ஷன். எனக்கு தினந்தினம் டென்ஷன்..." (நகைச்சுவையாக...)
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்: ``நீங்கள் பிஸி ஆனந்த்தான்."
``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்." - முதல்வர் விஜய்
``விவசாயிகள் நெல் மற்றும் கரும்பை விளைவிக்கவும் விற்பனை செய்யவும் உடல் பொருள் ஆவி அத்தனையையும் கொடுக்கின்றனர். அரசின் நிதிநிலைமை சரியில்லையெனினும் விவசாயிகளுடன் நிற்க விரும்புகிறோம். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்.
அந்த வகையில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு - 2850 ரூபாயும் பொது ரக நெல்லுக்கு - 2600 ரூபாயும் கரும்புக்கு டன்னுக்கு - 4000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்."
செல்போன் பயன்படுத்தாதீங்க! - எச்சரித்த சபாநாயகர்
ஐ.யூ.எம்.எல் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்தில் பேசுகையில் மொபைல் போனை பார்த்து பேசினார். அவர் பேசி முடித்தவுடன், 'அவைக்குள் மொபைல் பயன்படுத்தக் கூடாது என விதி இருக்கிறது. அடுத்த முறை அதை பின்பற்றுங்கள்' என சபாநாயகர் எச்சரித்தார்.
வன்னிஅரசு - சபாநாயகர் உரையாடல்
வன்னிஅரசு : `கன்னட தேசிய இனமக்கள் தங்களுக்கென ஒரு கொடியை அடையாளமாக வைத்து பொதுவெளியில் பயன்படுத்துகின்றனர்.'
சபாநாயகர் : `நிறைய நல்ல விஷயங்களை பேசிவிட்டீர்கள்...போதும்...'
வன்னிஅரசு : `மேதகு பிரபாகரன் அவர்களே இதை தடுக்கலாமா...'
சபாநாயகர் : `தீர்மானத்துக்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசுங்கள்...'
வன்னிஅரசு : `தமிழ்த் தேசியத்துக்கு எதிரான யாவருக்கும் பாரதிதாசனின் 'பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு..' என்பதையே கூற விரும்புகிறேன்.'
அமைச்சர் வன்னிஅரசு பேச்சு
"தமிழ்நாடு, தமிழர் என்கிற அடையாளத்தை தொடர்ந்து விதைத்து வருகிற அரசியல்தான் இன்னமும் தமிழகத்தில் நீடித்து வருகிறது.
இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள பண்பாட்டு சுதந்திரத்தின் அடிப்படையில், தமிழரின் பண்பாடான தமிழ்த்தாய் வாழ்த்தை பொது இடங்களில் முதலில் பாட வேண்டும் என்கிற தீர்மானத்தை வரவேற்கிறோம்.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம். ஒரே நாடு ஒரே மொழி என தேசிய இனத்தின் அடையாளத்தை மட்டுப்படுத்துவதற்கு எதிரான வரலாற்று தீர்மானம் இது".
சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
"1991 இல் அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டுமென முடிவெடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாதான்".
எடப்பாடி பழனிசாமி பேச்சு
இன்றைய கூட்டத்தொடரின் தொடக்கத்தில் 'தமிழ்தாய் வாழ்த்து' குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது...
"தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை காக்க அதிமுக எப்போதும் போராடியிருக்கிறது. அண்ணாவும், எம்.ஜி.ஆரும், அம்மாவும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்கள் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைகழகத்தை உருவாக்கினார். தமிழ்நாடு நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மா அறிவித்தார்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. அது தமிழுக்கு வழங்கும் மரியாதை. தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறில்லை. இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம். தமிழர் என்பதிலும் அதே அளவுக்கு பெருமை கொள்வோம். அதற்காக இந்த அரசின் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது".
பட்ஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று.
இன்றைய கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.