'தமிழ்த்தாய் வாழ்த்து' தீர்மானம் மட்டும் போதாது; திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?
'தமிழ்த்தாய் வாழ்த்து' தீர்மானம் மட்டும் போதாது; திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தனித்தீர்மானம் ஆளுநரையோ, மற்றவர்களை கட்டுப்படுத்தும் என்பது சந்தேகமே என ரகுபதி தெரிவித்தார்.
Published : August 10, 2026 at 4:26 PM IST
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது, அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தனித்தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் இன்று கொண்டு வந்த தீர்மானம் ஆளுநரையோ மற்றவர்களை கட்டுப்படுத்தும் என்பது சந்தேகம். இதற்கு ஒரு சட்ட அங்கீகாரம் தேவை. சட்ட அங்கீகாரம் பெற இந்த அரசு முயற்சிக்கிறதா? என்பது சந்தேகம். ஒன்றிய அரசு என்று சொல்லவே பயப்படும் இந்த அரசு சட்ட மசோதா கொண்டு வருமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இந்த தீர்மானத்திற்கு சட்ட வடிவத்தை இந்த கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு கொடுக்க முன்வர வேண்டும். இல்லையென்றால் 3-வது இடத்திற்கு தான் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்தை கொண்டு போய் விடுவார்கள். எங்களை பொறுத்தவரை இதற்கான சட்ட வடிவம் தேவை, இதை பேரவையிலும் சொல்லியிருக்கிறோம்.
இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க போகிறதா? இல்லையா? என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லை என்றால் அன்றைய தினத்தில், எங்களது உறுப்பினர்கள் இதுகுறித்து பேசுவார்கள்" என்றார்.