சாய் சுதர்சன் நீக்கம்.. இந்திய அணிக்கு அடி மேல் அடி.. இலங்கை டெஸ்ட் தொடரில் மாற்று வீரர் யார்?
சாய் சுதர்சன் நீக்கம்.. இந்திய அணிக்கு அடி மேல் அடி.. இலங்கை டெஸ்ட் தொடரில் மாற்று வீரர் யார்?
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகி உள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போதே சாய் சுதர்சனின் உடல்தகுதி குறித்து கேள்விகள் எழுந்தன. அவர் தனது வலது காலில் ஏற்பட்ட தசைநார் அழுத்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார்.
ஆனாலும், முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே அவருக்கு கை பெருவிரலில் ஏற்பட்ட பழைய காயம் மீண்டும் தீவிரமடைந்தது. தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அவர் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக இந்த இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்து விலகியிருந்தார். தற்போது அவரைத் தொடர்ந்து சாய் சுதர்சனும் விலகியிருப்பது இந்திய பேட்டிங் வரிசைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாக டாப் ஆர்டரில் தேவ்தத் படிக்கல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற இலங்கை டெஸ்ட் தொடரை 2 - 0 என வெல்வது இந்திய அணிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் காயத்தால் விலகுவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.