“சிஎஸ்கே பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்கை நியமிக்கலாம் ஏன்னா..”.. மேத்யூ ஹெய்டன் அதிரடி யோசனை
“சிஎஸ்கே பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்கை நியமிக்கலாம் ஏன்னா..”.. மேத்யூ ஹெய்டன் அதிரடி யோசனை
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை நியமிக்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் கூறி இருக்கிறார். ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற சிஎஸ்கே போன்ற ஒரு பெரிய அணிக்கு, வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட உள்ளூர் நபர் ஒருவரே சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று ஹெய்டன் கூறி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது நீண்ட கால தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்குடன் அண்மையில் பிரிந்தது. தோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் கூட்டணி சிஎஸ்கே அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்து பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அணியின் செயல்பாடு எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதனால் பிளெமிங்கை நீக்கியது ஒரு தைரியமான சிறந்த முடிவு என்று ஹெய்டன் வரவேற்றுள்ளார்.
இது குறித்து ஸ்போர்ட்ஸ்டார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய மேத்யூ ஹெய்டன், "சிஎஸ்கே போன்ற ஒரு பெரிய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்களை விட, உள்ளூர் பின்னணி கொண்ட ஒரு பயிற்சியாளர் தான் மிகச் சரியாக இருப்பார். தினேஷ் கார்த்திக்கிற்கு சென்னை கிரிக்கெட் கலாச்சாரம் நன்றாகத் தெரியும். எனவே, சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அவரே மிகவும் பொருத்தமானவர்" என்று கூறியுள்ளார்.
தினேஷ் கார்த்திக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராகப் பொறுப்பேற்றார். அவரது ஆலோசனையின் கீழ் ஆர்சிபி அணி 2025 இல் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதோடு, 2026 ஐபிஎல் தொடரிலும் அதை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டது. இதனால் அவர் பெரிய பொறுப்பை ஏற்கத் தகுதியானவர் என்று ஹெய்டன் குறிப்பிட்டார்.
தற்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். அவர் கேப்டனாக தன்னை இன்னும் முழுமையாக நிரூபிக்க வேண்டியுள்ளது. சிஎஸ்கே அணி இன்னும் தங்களது புதிய தலைமை பயிற்சியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், நிதானமாக ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில், வாய்ப்பு குறைவு என்றாலும் தினேஷ் கார்த்திக் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.