📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 24, 2026 06:03 PM

IND vs SL: 503 ரன்கள் குவித்த இந்தியா.. இலங்கை ஆட்டம் துவங்கிய உடன் நிறுத்தம்.. என்ன நடந்தது?

IND vs SL: 503 ரன்கள் குவித்த இந்தியா.. இலங்கை ஆட்டம் துவங்கிய உடன் நிறுத்தம்.. என்ன நடந்தது?

IND vs SL: 503 ரன்கள் குவித்த இந்தியா.. இலங்கை ஆட்டம் துவங்கிய உடன் நிறுத்தம்.. என்ன நடந்தது?

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் அன்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய இலங்கை அணி, மழை குறுக்கீடு காரணமாக வெறும் 0.2 ஓவர்கள் மட்டுமே விளையாடிய நிலையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

கொழும்பு சிங்களா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணி விரைவாக ரன் குவித்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில் காயம் காரணமாக தற்காலிகமாக வெளியேறியிருந்த ரிஷப் பண்ட் மீண்டும் களம் இறங்கி 63 ரன்கள் குவித்தார். துருவ் ஜூரல் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி இணைந்து 112 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. மேலும் தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 50 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 43 ரன்களும் எடுத்தனர்.

தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 95 ரன்களுடன் விளையாடி வந்த ஜூரல், பின்னர் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி 500 ரன்களைக் கடந்தவுடன் சுப்மன் கில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

இலங்கை தரப்பில் பந்துவீச்சில் அசிதா பெர்னாண்டோ 106 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிரபாத் ஜெயசூர்யா 132 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், கேசரா நுவந்தா 154 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். லஹிரு குமாரா 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி 0.2 ஓவர்கள் மட்டுமே விளையாடிய நிலையில் மழை குறுக்கிட்டது. லேசான மழையாக இருந்த போதிலும் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மைதானம் மூடப்பட்டது. இதனால் இலங்கை அணி ரன் ஏதும் எடுக்காமல் 0 விக்கெட்டுடன் தற்போதைக்கு ஆட்டத்தை நிறுத்தியுள்ளது. இந்திய அணியை விட இலங்கை அணி 503 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.