சிறுமிக்குப் பாலியல் தொல்லை; சமையற்காரருக்குச் சிறை
உணவகம் ஒன்றில் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் இருந்த வேளையில், கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 63 வயது சமையற்காரர் காசிம் ஜூஹாமாட்டுக்கு எட்டு ஆண்டுகள் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து, காசிமுக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 26) தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பின்போது, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிறுமியை மானபங்கம் செய்த இரண்டு குற்றச்சாட்டுகள், அவரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட ஒரு குற்றச்சாட்டு உட்பட மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
50 வயதுக்கும் மேற்பட்டவர் என்பதால், சட்டப்படி காசிமுக்குப் பிரம்படி தண்டனை விதிக்க முடியாது. அதற்குப் பதிலாக மேலும் ஆறு மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட எட்டு ஆண்டுகள், ஆறு மாதச் சிறைத் தண்டனையில் அது அடங்கும்.
சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அச்சிறுமிக்கும் அந்த நபருக்கும் இடையிலான உறவுமுறை வெளியிடப்படவில்லை.
உணவக மேலாளர்களில் ஒருவர் சிறுமியின் சார்பில் காவல்துறையிடம் புகார் அளித்தார். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட காசிம், அன்றிலிருந்து விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.