சரிவை சந்தித்த வருண் சக்கரவர்த்தி.. காயத்திலிருந்து கம்பேக் கொடுக்க தீவிரம்
சரிவை சந்தித்த வருண் சக்கரவர்த்தி.. காயத்திலிருந்து கம்பேக் கொடுக்க தீவிரம்
சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் தனது 29ஆவது வயதில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி, பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு ஆண்டை கடந்துள்ளார். சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பைப் பட்டம் வென்ற வருண் சக்கரவர்த்தி காயங்களுடன் ஐபிஎல் தொடரில் விளையாடினார். தற்போது, தனது உடல் தகுதியை மீட்கும் முனைப்பில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார்.
இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் இந்த கட்டத்திலும், நான் இன்னும் எனது முதல் பாதியில்தான் இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில், நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது மிகவும் தாமதமாகத்தான். எனவே, நான் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது," என்று 'கூறினார்.
இங்கிலாந்து டி20 தொடரின் போது ஏற்பட்ட கிரேடு 2 இடது தொடை தசைநார் காயத்திலிருந்து இப்போது முழுமையாக குணமடைந்துள்ள சக்கரவர்த்தி, மிகவும் பரபரப்பான ஒரு காலகட்டத்தில் மீண்டும் களம் திரும்புகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள், ஜப்பானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போட்டி மற்றும் நடப்பு சாம்பியனான இந்தியா நேரடியாக கால் இறுதிப் போட்டியிலிருந்து விளையாடத் தொடங்கும் ஐச்சி-நகாயாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என அவர் தயாராகி வருகிறார்.
தனது காயம் குறித்து பேசிய வருண் சக்கரவர்த்தி, "உண்மையில் இது என் வாழ்நாளில் ஏற்பட்ட முதல் தசைநார் காயமாகும். இதற்கு முன்பு எனக்கு ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் மைதானத்தில் நிகழ்ந்த திடீர் பாதிப்புகள் மற்றும் விபத்துகளால் ஏற்பட்டவை மட்டுமே. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் மேம்பாட்டு மையத்தின் பணியாளர்கள் எனது நம்பிக்கையை மீண்டும் பெற பெரிதும் உதவினர். அங்கு பணிபுரிந்த ஒவ்வொருவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்," என்று அவர் தெரிவித்தார்.
"நிச்சயமாக, நான் அங்கு அதிக நேரம் செலவிட்டேன். நிறைய ஓட்டப் பயிற்சிகளையும், உடல்திறன் பயிற்சிகளையும் மேற்கொண்டேன், இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆமாம், நம்பிக்கையைப் பெற சிறிது காலம் எடுக்கும். ஆனால் நீங்கள் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றுவிட்டால், உங்களை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தத் தொடங்குவீர்கள். அதுதான் இயல்பு,"
"நீங்கள் விளையாட்டிலிருந்து தள்ளி இருக்கும் போது, உங்களது திறன்களை மேலும் கூர்மைப்படுத்திக் கொள்ள முடியும். தொடர்ச்சியாக விளையாடும் போது உங்களுக்கு கிடைக்காத நேரத்தை, புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்."
"ஒரு பந்துவீச்சாளரைப் பொறுத்தவரை, காலணிகள்தான் அவர்கள் வைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய உபகரணங்கள் ஆகும். பேட்ஸ்மேன்களுக்குப் பல உபகரணங்கள் இருக்கலாம், ஆனால் ஒரு பந்துவீச்சாளருக்கு காலணிகள்தான் எல்லாமே," என்று வருண் கூறினார்.
"ஒரு சுழற்பந்து வீச்சாளராக, பந்தை வீசிய பின் கால்களை சுழற்றித் திரும்பும்போது கால்கள் சற்று அகலமாக மாறத் தொடங்குகின்றன. ஏனெனில் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை வீசி தரையிறங்கிய பிறகு அதிகமாகத் திரும்ப வேண்டியிருக்கும். எனவே கால்விரல் பகுதியில் அகலமான காலணிகள் இருப்பது மிகவும் முக்கியம்," என்று அவர் கூறினார்.
"நான் ஜப்பானுக்குச் செல்வது இதுவே முதல் முறை. நான் இதற்கு முன்பு ஜப்பானுக்கோ அல்லது இது போன்ற வேறு விளையாட்டு விழாக்கோ சென்றதில்லை. இதுவரை நான் ஐசிசி மற்றும் ஏசிசி தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ளேன். மற்ற விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களைச் சந்தித்துப் பேச நான் மிகவும் ஆவலாகக் காத்திருக்கிறேன்."
"ஒரு 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர் தன்னை எவ்வாறு தயார்படுத்துகிறார், ஒரு பேட்மிண்டன் வீராங்கனை அல்லது வீரர் தன்னை எவ்வாறு தயாரித்துக் கொள்கிறார் என்பதை நான் பார்க்க விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.