சர்வதேச விளையாட்டு நகரம் திட்டம் கைவிடப்படவில்லை என அமைச்சர் விளக்கம்
“செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிடவில்லை; திட்டத்தை மறுசீரமைப்பு செய்து வருகிறோம்,” என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: தி.மு.க., ஆட்சியில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், 128 ஏக்கரில், 261 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.இந்த அரசு, பரந்துார் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தது போல, சர்வதேச விளையாட்டு நகர திட்டத்தையும் ரத்து செய்துள்ளது. எதற்காக அந்த திட்டம் கைவிடப்பட்டது?அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: கடந்த, 100 ஆண்டுகளில், தமிழகத்தை சேர்ந்த யாரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றது கிடையாது. இந்த நிலையை மாற்ற, புதிய கொள்கையை முதல்வர் உருவாக்கி வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும், ஆண்கள், பெண்கள் விளையாட்டு வீரர்களுக்கு விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.மேலும், 10 இடங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன. சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரத்தை அமைக்க வேண்டும் என்பது தான் முந்தைய அரசின், தற்போதைய அரசின் நோக்கம்.எனவே, சர்வதேச விளையாட்டு நகர திட்டம் கைவிடப்படவில்லை. அங்கு, 42 விளையாட்டுகளுக்கும் சேர்த்து, விளையாட்டு நகரத்தை உருவாக்க, திட்டத்தில் மறுசீரமைப்பு செய்து, அறிக்கை தயாரித்து வருகிறோம்.அந்த இடம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். விரைவில் முதல்வர் நல்ல செய்தி அறிவிப்பார்.இவ்வாறு விவாதம் நடந்தது.