IND vs SL: இந்திய அணியில் 6வது இடத்தில் யார் விளையாடனும்? பிளேயிங் XI குறித்து ஜாபர் பேச்சு
IND vs SL: இந்திய அணியில் 6வது இடத்தில் யார் விளையாடனும்? பிளேயிங் XI குறித்து ஜாபர் பேச்சு
கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஆறாவது இடத்தில் யார் களம் இறங்க வேண்டும் என்பது குறித்த தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 15 முதல் இலங்கையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.
காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ஆறாவது வரிசையில் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகிய இருவரில் யார் களம் இறங்க வேண்டும் என்பதில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வாசிம் ஜாபர், தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருடன், பயிற்சிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 142 ரன்கள் எடுத்த தேவ்தத் படிக்கல் மூன்றாவது வரிசையிலும், கேப்டன் சுப்மன் கில் நான்காவது வரிசையிலும், ரிஷப் பந்த் ஐந்தாவது வரிசையிலும் களம் இறங்குவார்கள் என்று கணித்துள்ளார்.
துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இருவரில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜூரலுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ஜாபர் தேர்வு செய்துள்ளார். சர்பராஸ் கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், ஜூரல் கடந்த சில காலமாக அணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
"படிக்கல் சதம் அடித்துள்ளதால் அவர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார். ரிஷப் பந்த் ஐந்தாவது இடத்தில் விளையாடலாம். ஆறாவது இடத்தில் சர்பராஸ் அல்லது துருவ் ஜூரல் விளையாடலாம். ஜடேஜாவும் அணியில் இருக்கிறார், அவர் நிச்சயமாக இரண்டாவது ஸ்பின்னராக விளையாடுவார். ஜூரல் மற்றும் சர்பராஸ் ஆகியோருக்கு இடையே தான் போட்டி இருக்கும். ஜூரல் கடந்த சில காலமாக அணியில் இருப்பதால் அவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்புபவர், தனது வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். அணியின் தொடர்ச்சியைத் தக்கவைக்க ஜூரல் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என ஜாபர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
சர்பராஸ் கான் கடைசியாக 2024-இல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு நடந்த டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.