இனி ஒலிம்பிக்கில் தங்கம் உறுதி.. கேலோ இந்தியா மூலம் 30 ஆயிரம் விளையாட்டு வீரர்களை கண்டறிய திட்டம்
இனி ஒலிம்பிக்கில் தங்கம் உறுதி.. கேலோ இந்தியா மூலம் 30 ஆயிரம் விளையாட்டு வீரர்களை கண்டறிய திட்டம்
டெல்லி: இந்தியாவின் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு ஆதரவளிக்க கொண்டுவரக்கப்பட்ட 'கேலோ இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு வழங்கும் ஆதரவைப் பெறும் வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பதோடு, அவர்களைச் சுற்றியுள்ள விளையாட்டு சூழலை வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SAI) கேலோ இந்தியா பிரிவின் துணை இயக்குநர் ஜெனரலான (DDG) மயங்க் ஸ்ரீவஸ்தவா (IPS), மைக்கேல் (myKhel) ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், விரிவாக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், அடிமட்ட அளவிலான கவனம், பயிற்சியாளர் மேம்பாடு, விளையாட்டு அறிவியல், மாவட்ட அளவிலான மையங்கள் மற்றும் இந்தியாவில் விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதில் உள்ள சவால்கள் குறித்துப் பேசினார்.
கேலோ இந்தியா திட்டம் 2026-27 முதல் 2030-31 வரையிலான காலத்திற்கு ரூ.29,054 கோடி மதிப்பீட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேசிய விளையாட்டு கூட்டமைப்பிற்கான உதவித் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.7,387 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.36,441 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்தாண்டு கேலோ இந்தியா திட்டம் இந்தியாவின் நீண்ட கால 2036 ஒலிம்பிக் தொலைநோக்கு பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மயங்க் ஸ்ரீவஸ்தவா "இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய கேலோ இந்தியா திட்டத்தை விளையாட்டு உலகில் ஒரு புரட்சிக்கு இணையானது என்றே புரிந்து கொள்ள முடியும். இதற்கு முந்தைய திட்டத்தை விட எட்டு மடங்கு அதிக பட்ஜெட் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எங்களால் இப்போது 10 மடங்கு கூடுதல் கேலோ இந்தியா வீரர்களுக்கு ஆதரவளிக்க முடியும்" என்றார்.
"முன்பு உதவித்தொகை வழங்கப்படும் கேலோ இந்தியா வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 3,000 ஆக இருந்தது. இப்போது, நாம் 30,000 கேலோ இந்தியா வீரர்களை உருவாக்க முடியும். அவர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் மற்றும் அவர்கள் ஒரு பைசா கூட செலவிட வேண்டியதில்லை அவர்களின் அனைத்து செலவுகளையும் இந்திய அரசே ஏற்கும்" என்று ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கேலோ இந்தியா கொள்கை ஆவணம், வீரர்களின் எண்ணிக்கையில் 10 மடங்கு அதிகரிப்பு, E-KIA பிரிவை உருவாக்குதல் மற்றும் இதில் உள்ளடக்கப்படும் விளையாட்டுகளின் எண்ணிக்கையை விரிவாக்குதல் ஆகியவற்றை விளக்குகிறது. திறமைகளை கண்டறிதல் மற்றும் மேம்படுத்துதல் (Talent Identification and Development) என்ற பிரிவுக்கு ₹2,407 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தின் பின்னணியில் உள்ள விசயம் குறித்து பேசிய ஸ்ரீவஸ்தவா "இதை நான் '720-டிகிரி ஆதரவு அமைப்பு' என்று அழைக்கிறேன். அடிமட்ட நிலையிலிருந்து தொடங்கி உயர்மட்ட தளங்களை அடைவது வரை, ஒவ்வொரு அம்சமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது" என்றார்.
"புதிய திட்டத்தில், பயிற்சியாளர்களுக்கான பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் புதிய பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்குவது மட்டுமல்லாமல், அவர்களை பணியமர்த்துவதற்கான திட்டங்களையும் கொண்டுள்ளோம். மாநில அரசுகள் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் தரமான பயிற்சியாளர்களை பணியமர்த்த ஏதுவாக இந்த ஆதரவுகள் வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.
பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களின் மேம்பாட்டிற்காக கேலோ இந்தியா திட்டம் ₹748 கோடியை ஒதுக்கியுள்ளது. பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களின் சான்றிதழ் மற்றும் அங்கீகாரத்தை தரப்படுத்துவதற்காக தேசிய பயிற்சியாளர் அங்கீகார வாரியத்தை (National Coach Accreditation Board - NCAB) நிறுவ இத்திட்டம் முன்மொழிகிறது.
இது குறித்து விளக்கம் அளித்த ஸ்ரீவஸ்தவா "முன்பெல்லாம், பயிற்சியாளர்கள் அல்லது விளையாட்டு அறிவியல் ஊழியர்களுக்கு நாங்கள் போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், இன்றைய விளையாட்டுத் துறையில் நவீன விளையாட்டு அறிவியல் (sports science) இல்லாமல் சிறந்து விளங்க முடியாது."
"புதிய திட்டத்தின் கீழ், நாங்கள் ஒரு முழுமையான விளையாட்டு அறிவியல் அமைப்பை உருவாக்குகிறோம், புதிய விளையாட்டு விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை சாய் (SAI) இன் தேசிய சிறந்த மையங்கள் (NCOEs) மற்றும் விளையாட்டு அகாடமிகளில் பணியமர்த்துகிறோம்," என்று அவர் கூறினார்.
"இந்தியாவில் உண்மையான விளையாட்டு கலாச்சாரத்தை உருவாக்குவதே நமது மிகப்பெரிய சவாலாகும். நடுத்தர குடும்பங்களில் உள்ள பலர் இன்னும் விளையாட்டை ஒரு தொழில்முறை வாழ்க்கையாக கருதவில்லை, அதற்கு பதிலாக குழந்தைகளை கல்வி பக்கமாகவே தள்ளுகிறார்கள். அந்த நம்பிக்கையை உருவாக்குவது ஒரு மிகப்பெரிய பணி. இது முற்றிலும் அவர்களின் பார்வையை மாற்றுவதை சார்ந்ததாகும்" என்றார்.
"வீரர்களிலேயே பலர் அரசு வேலை பெறுவதற்காக மட்டுமே விளையாடுகிறார்கள். இந்தியாவை உலகளாவிய விளையாட்டு வல்லரசாக மாற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு பெரும் முயற்சி தேவைப்படுகிறது, இருப்பினும் அடிமட்ட அளவிலிருந்து உயர்மட்டத்திற்கான செயல்பாடுகள் இப்போது உண்மையான முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளன."
"முன்பு, பல்வேறு மாநிலங்களில் முறையான நிறுவன ஆதரவு இல்லை. இப்போது, இந்தியாவில் உள்ள சுமார் 750 முதல் 780 மாவட்டங்களில், அனைத்து மாவட்டங்களிலும் கேலோ இந்தியா மையங்கள் உள்ளன. இதனால் ஒவ்வொரு இளம் வீரருக்கும் முறையான பயிற்சி பெற பிரத்யேக உள்ளூர் வசதி கிடைக்கிறது."
"உள்ளூர் பயிற்சியாளர்களின் பற்றாக்குறையை தீர்க்க, மத்திய அரசின் முழு நிதி ஆதரவுடன், இந்த மையங்களில் முன்னாள் சாம்பியன் வீரர்களை (Past Champion Athletes) பயிற்சியாளர்களாக நியமிக்கிறோம்." இந்த மாதிரி ஏற்கனவே நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் தற்போதைய தரவுகளின்படி, கேலோ இந்தியா மையங்களில் 950 க்கும் மேற்பட்ட முன்னாள் சாம்பியன் வீரர்களின் கீழ் 40 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் 28,234 க்கும் அதிகமான வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
"புதிய திட்டத்தின் கீழ், வெறும் மையங்களை உருவாக்குவதோடு நாங்கள் நின்றுவிடவில்லை. நாங்கள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் பள்ளிகளை (District-Level Sports Schools) நிறுவுவோம். இவை தங்கிப் பயிலும் வசதிகளாக இருக்கும், இதனால் குழந்தைகள் ஒரே கூரையின் கீழ் படிக்கவும் பயிற்சி பெறவும் முடியும்."
"தொலைதூரப் பகுதிகளில் உள்ள திறமைகளை அடையாளம் காண, மண்டலக் குழுக்கள் (Zonal Committees) மற்றும் திறமையான வீரர்களை தேடுபவர்கள் கிராம நிலை வரை அனுப்பப்படுவார்கள். அவர்கள் அறிவியல் பூர்வமான உடற்தகுதி மதிப்பீடுகளைப் பயன்படுத்தி இளம் திறமையாளர்களை மதிப்பிட்டு, தகுதியான வீரர்களை நேரடியாக முதன்மை விளையாட்டு அமைப்பில் இணைப்பார்கள்" என்று அவர் விவரித்தார்.
ஒரு வீரரைக் கண்டறிவதற்கும், அந்த வீரர் மேம்படுவதற்குப் போதுமான வாய்ப்புகளை வழங்குவதற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதிலும் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. விளையாட்டு போட்டிகள் மற்றும் லீகுகளுக்காக அரசாங்கம் ₹2,358 கோடியை ஒதுக்கியுள்ளது, புதிய உள்கட்டமைப்பு வலுவான உள்நாட்டு போட்டி கட்டமைப்பை முன்மொழிகிறது.
ஏற்கனவே நிறுவப்பட்ட கேலோ இந்தியா இளையோர் (Youth), பல்கலைக்கழகங்கள் (University), குளிர்கால (Winter) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகளுடன் (Para Games) இணைந்து, பள்ளி சாம்பியன்ஷிப் போட்டிகள், பல்கலைக்கழக லீகுகள் மற்றும் கிளப்புகள், மாவட்டங்கள் மற்றும் மாநில அகாடமிகள் உள்ளடக்கிய பிராந்திய அல்லது விளையாட்டு சார்ந்த லீகுகளை இத்திட்டம் திட்டமிடுகிறது.