📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 10, 2026 09:33 PM

இந்திய வீரர்கள் என்ன கரும்பு சாறா பிழிவதற்கு? பிசிசிஐ, ஐசிசிக்கு கவாஸ்கர் காட்டம்

இந்திய வீரர்கள் என்ன கரும்பு சாறா பிழிவதற்கு? பிசிசிஐ, ஐசிசிக்கு கவாஸ்கர் காட்டம்

இந்திய வீரர்கள் என்ன கரும்பு சாறா பிழிவதற்கு? பிசிசிஐ, ஐசிசிக்கு கவாஸ்கர் காட்டம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து சாறு பிழியப்படும் கரும்புகள் அல்ல என்பதை பிசிசிஐ, ஐசிசி உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அடுத்தடுத்து போட்டிகள் நிறைந்த சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ச்சியான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், இது இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர்களின் உருவாக்கத்தைப் பாதிப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், "இந்திய கிரிக்கெட் குறித்து ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றது. 2027ஆம் ஆண்டு முதல் தொடங்கும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணையைப் பற்றி விவாதிக்க ஐசிசியின் கூட்டம் நடைபெறும்போது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இயந்திரங்களோ அல்லது கடைசி சொட்டு சாறு வரை பிழியப்படும் கரும்புகளோ அல்ல என்பதை முடிவெடுக்கும் நிர்வாகிகள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவால் ஒரே நேரத்தில் மூன்று அணிகளை உருவாக்க முடியும் என்ற வாதம் உலக அளவில் பெருமை பேசிக்கொள்ள உதவலாம். ஆனால், சமீபத்திய முடிவுகள் காட்டுவது என்னவென்றால், தற்போதைய முதன்மை இந்திய அணியால் கூட பெரிய அளவிலான கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்பதே யதார்த்தம்."

"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வது அணிக்குப் புத்துணர்ச்சி அளித்து, வரவிருக்கும் போட்டிகளுக்கு நம்பிக்கையைத் தரும் என்பது உண்மைதான். ஆனால், உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை அளிக்காதவரை, உலகத்தரம் வாய்ந்த சிறந்த வீரர்களை எங்களால் உருவாக்க முடியாது" என்று கவாஸ்கர் சாடியுள்ளார்.

அதிகப்படியான போட்டி அட்டவணை மற்றும் வீரர்களின் காயம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் இந்தியாவின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ சமீபத்திய கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன்பு வீரர்களுக்குப் போதிய ஓய்வு, அங்குள்ள சூழலுக்குப் பழகுவதற்கான நேரம் மற்றும் பயிற்சிப் போட்டிகள் ஆகியவற்றை வழங்குவதில் வாரியம் கவனம் செலுத்தும் என்று அதன் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.