இந்தியா
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடரில் கேப்டன் சுப்மன் கில் 5 மெகா சாதனைகளை படைக்க வாய்ப்பு
காலே: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி காலே நகரில் துவங்க உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக முதன்முறையாக இலங்கை சென்றுள்ள சுப்மன் கில், இந்தத் தொடரில் ஐந்து முக்கிய வரலாற்று சாதனைகளை படைக்கும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் 3000 ரன்களை எட்டியதில்லை. இந்த தொடர்களில் மட்டும் சுப்மன் கில் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 10 சதங்கள், 8 அரைசதங்களுடன் 2843 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 157 ரன்கள் எடுத்தால், இந்த இமாலய மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
நடப்பு 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் சுப்மன் கில் 8 போட்டிகளில் 5 சதங்களுடன் 950 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் வெறும் 50 ரன்கள் எடுத்தால், ஒரே சாம்பியன்ஷிப் சுழற்சியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார்.
டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிவேகமாக 1500 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனை சுனில் கவாஸ்கர் வசம் (21 இன்னிங்ஸ்) உள்ளது. கேப்டனாக 15 இன்னிங்ஸ்களில் 6 சதங்களுடன் 1076 ரன்கள் குவித்துள்ள கில், இன்னும் 424 ரன்கள் சேர்த்தால் கவாஸ்கரின் இந்த சாதனையை முறியடிப்பார்.
கடந்த 1997 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் அடித்த 143 ரன்களே, இலங்கை மண்ணில் இந்திய கேப்டன் ஒருவரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக நீடிக்கிறது. இதனை முறியடிக்கும் வாய்ப்பு கில்லுக்கு உள்ளது. அதேபோல், இலங்கை மண்ணில் டெஸ்ட் கேப்டனாக சச்சின், விராட் கோலி தலா 2 சதங்கள் அடித்துள்ளனர். இந்தத் தொடரில் கில் 3 சதங்கள் அடித்தால், அந்த சாதனையையும் தன்வசமாக்குவார்.