📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 11, 2026 02:04 PM

"இடம் மாறியதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை"

"இடம் மாறியதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை"

"இடம் மாறியதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை" - ஓபிஎஸ் vs செங்கோட்டையன் காரசார விவாதம்

"ஆயிரம் கைகளை நீட்டி ஆதவனை மறைப்பதைப் போல மகளிர் உரிமைத் தொகையின் பெயரை மாற்றியிருக்கிறார்கள்" - ஓபிஎஸ்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் விவாதத்தின்போது பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம், "ஆயிரம் கைகளை நீட்டி ஆதவனை மறைப்பதைப் போல மகளிர் உரிமைத் தொகையின் பெயரை மாற்றியிருக்கிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை உயரும் என எதிர்பார்த்து மகளிர் ஏமாந்து போயிருக்கின்றனர். நல்லதும் மாற்றம்தான் கெட்டதும் மாற்றம்தான். மக்கள் எதிர்பார்த்து வாக்களித்து ஏமாந்து போயிருக்கின்றனர்.

தேர்தல் அறிக்கையைத் தங்களின் முன்னோடி திட்டமாக தவெக அறிவித்தது. அந்த அறிவிப்புகளைககூட நிறைவேற்றாததால் மக்கள் ஏமாந்து நிற்கின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

அதற்கு செங்கோட்டையன், "திட்டங்களை நிறைவேற்ற 5 ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. மூன்றே மாதங்களில் சரித்திரம் படைக்க முடியாது. தமிழகமே பாராட்டும் தூய ஆட்சியைப் பற்றி ஏமாற்றத்திற்குரிய ஆட்சி என விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. இடம் மாறியிருப்பதால் இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை" என்று கூற, "இடத்தை முதலில் மாற்றியது செங்கோட்டையன்தான்" என்று ஓபிஎஸ் பதில் அளித்திருக்கிறார்.

இருவருக்கும் இடையேயான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "செங்கோட்டையன் அவர்கள் இடம் மாறினாலும் அவர் இதயத்தில் இருக்கும் படத்தை தலைவர் மாற்ற சொல்லவில்லை. அண்ணனுடைய பாக்கெட்டைப் பார்க்கையில் இடமும் மாறியிருக்கிறது இதயமும் மாறியிருக்கிறது" என்றிருக்கிறார்.

தொடர்ந்து, "செங்கோட்டையன் அண்ணன் இடம் மாறினாலும் அவர் இதயத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் படமே இருக்கிறது. ஆனால், அம்மாவால் முதல்வராக்கப்பட்டவரிடம் சட்டையில் யார் படம் இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச, "பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், அம்மா இவர்களையெல்லாம் நாங்கள் கடைசி வரை நெஞ்சில் வைத்திருப்போம். படத்தைக் காட்டி ஏமாற்றும் பழக்கம் எங்களுக்கில்லை.

உங்களோடு (செங்கோட்டையன்) நான் இணைந்து பயணித்திருக்கிறேன். என்னைப் பற்றி உங்களுக்கு 200% தெரியும். எந்த நிலையிலும் மாற மாட்டேன். திராவிட இயக்கங்களுக்குள்தான் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகாலமாக தமிழகத்தின் உரிமைகளை எந்நாளும் விட்டுக்கொடுக்கமாட்டேன் எனப் போராடிய முன்னாள் முதல்வருக்கு நன்றி சொல்லும் வகையில்தான் அவர் படத்தை பையில் வைத்திருக்கிறேன்" என்று ஓ.பி.எஸ் பதிலளித்திருக்கிறார். இப்படி ஒவ்வொருத்தரும் மாறி மாறி விவாதிக்க சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடந்திருக்கிறது.