குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி
குடும்பத்துக்கு பயந்து ரூ.5 லட்சத்தை புதைத்து வைத்த விவசாயி - அரித்து சேதப்படுத்திய கரையான்கள்
ராஜஸ்தானில் விவசாயி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கரையான்கள் கடித்து சேதப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
பொதுவாக பண்டைய காலத்தில் தங்கம் போன்ற உலோகங்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க பூமிக்கு அடியில் புதைத்து வைப்பது வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் லோத்ரா மாவட்டத்தில், விவசாயி ஒருவர் தனது பணத்தை தனது வயலில் ரகசியமாகப் புதைத்து இருந்தார். ஆனால் அதனை திரும்ப எடுத்தபோது அவர் அதிர்ச்சிக்குள்ளார். அவர் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தாள்கள் கரையான் அரித்துச் சேதமடைந்துவிட்டது.
லோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ரா என்ற கிராமத்தை சேர்ந்த மங்கிலால் மேக்வால் என்பவர் ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்பு ஒரு நிலத்தை விற்பனை செய்தார். அதில் அவருக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு தனது விவசாய நிலத்தில் ஒரு சிறிய வீட்டை கட்டத் திட்டமிட்டிருந்தார். ஆனால் சில மாதங்கள் கழித்த பிறகு கட்டலாம் என்று நினைத்தார்.
ரூ.5 லட்சம் பூமிக்குள் புதைப்பு
அதேசமயம் தன்னிடம் இருந்த பணத்தை யாராவது திருடிவிடலாம் அல்லது குடும்ப உறுப்பினர்களால் செலவிடப்படலாம் என்று அவர் அஞ்சினார். எனவே பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மங்கிலால் ரூ. 500 நோட்டுகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் இரவில் தனது வயலில் புதைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பின்னர் அந்தப் பணம் தேவைப்பட்டபோது, அதை எங்கே புதைத்திருந்தார் என்பது அவருக்கு நினைவில் வரவில்லை.
இதனால் சுமார் தனது வயல் முழுவதும் பல நாட்களாகத் தேடியும் அவரால் அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடும்பத்தினருக்கு தெரியாமல் தேடிக்கொண்டிருந்தார். இறுதியில் அவர் தனது குடும்பத்தினரிடம் பணத்தை பூமிக்குள் புதைத்த விஷயத்தைக் கூறினார். உடனே அவர்களும் தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இறுதியில் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்தனர்.
மழையால் வெளியில் வந்த பணம்
சமீபத்தில் பெய்த மழைக்கு பின், குடும்பத்தினர், விதைப்பதற்கு வயலை தயார் செய்து கொண்டிருந்த போது, பணம் கண்டுபிடிக்கப்பட்டது. புதைக்கப்பட்ட பாலித்தீன் பையை உழவு இயந்திரமொன்று மேற்பரப்பிற்கு கொண்டு வந்தது. மறுநாள், மங்கிலாலின் மனைவியும் மகனும் பையை கவனித்து, அதைத் திறந்து பார்த்தபோது, 500 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் கரையான்கள் அரித்து சேதப்படுத்தி இருந்தது.
நிராகரித்த வங்கிகள்
பின்னர், அந்தக்குடும்பத்தினர் சேதமடைந்த பணத்தாள்களுடன் பச்ச்பத்ரா மற்றும் பலோத்ராவில் உள்ள வங்கிக் கிளைகளை அணுகினர். இருப்பினும், அத்தாள்களின் நிலையை பார்த்த வங்கி அதிகாரிகள், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு வங்கியை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர். பணக் கஷ்டம் மற்றும் போதிய தகவல் இல்லாமை போன்ற காரணத்தால் அவர்கள் ஜெய்ப்பூருக்கு செல்வது தாமதமாகி இருக்கிறது. ஆனாலும் சேதமடைந்த கரன்சியை எப்படியாவது மாற்றிவிடலாம் என்றும், கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.5 லட்சத்தை மீட்டெடுக்கலாம் என்றும் மங்கிலால் இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறார்.
குடும்பத்திற்கு தெரியாமல் வயலில் பணத்தைப் புதைத்து வைத்த தனது முடிவுக்காக அந்த விவசாயி வருத்தம் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளர். திருட்டு மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர் மேற்கொண்ட அந்த முயற்சியியால் இறுதியில் அப்பணம் கரையான் அரித்து அழிந்துபோய்விட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்காக அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். சேதம் அடைந்த ரூபாய் நோட்டுடன் மங்கிலால் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.