📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 27, 2026 07:04 PM

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் அணையை திறந்து வைக்கிறார்

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் அணையை திறந்து வைக்கிறார்

சேலம்: டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைகளுக்காக மேட்டூர் அணை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்கப்படும் எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் நேரில் வருகை தந்து அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவைக்க உள்ளார்.

வழக்கமாக டெல்டா குறுவைச் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது மரபாகும். இருப்பினும், நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கர்நாடகாவிலிருந்து வழக்கமான நீர்வரத்து கிடைக்காததாலும் நிர்ணயிக்கப்பட்ட நாளில் அணையைத் திறக்க இயலவில்லை.

இதனால், சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாமல் டெல்டா விவசாயிகள் பெரும் கவலையிலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்திருந்தனர்.

தற்போது காவிரி அணைப் பகுதிகளில் பெய்துவரும் பரவலான கனமழை,கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் காரணமாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, அணையின் நீர்மட்டம் 88.84 அடியாக உயர்ந்து, நீர் இருப்பு 51.33 டி.எம்.சி அளவை எட்டியுள்ளது.

நீர்வரத்து மேம்பட்டுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக 45 நாள்களுக்குத் தண்ணீரைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. காவிரிப்படுகையில் கூடுதல் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள், நீர் திறப்புக்கான ஆரம்பக்கட்டப் பணிகளை சேலம் மண்டல காவல்துறை உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.