மீனாட்சி கோயில் கோபுர கலசங்களில் வரகு நிரப்பல் தங்க கொடிமரங்களும் ஜொலிக்கின்றன
பதிவு செய்த நாள்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17 ல் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு கட்டங்களாக திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதன்ஒரு பகுதியாக 12 கோபுரங்களில் உள்ள 74 செப்புக் கலசங்களில் பழுதடைந்த மரக்கட்டைகளை மாற்றும் பணி மற்றும் வரகு நிரப்பும் பணி நடந்து வருகிறது.ஏற்கனவே கிழக்கு ஒன்பது நிலை ராஜகோபுரம், தெற்கு ஒன்பது நிலை கோபுரம், மேற்கு ஒன்பது நிலை கோபுரம், கிழக்கு ஏழு நிலை கோபுரம், கிழக்கு சுவாமி ஐந்து நிலை கோபுரம், மேற்கு அம்மன் ஐந்து நிலை கோபுரம், மேற்கு சுவாமி ஐந்து நிலை கோபுரம் ஆகியவற்றிற்கு கட்டைகள் பிரித்து வரகு நிரப்பும் பணி நடந்தது. அதன் தொடர்ச்சியாக, வடக்கு சுவாமி ஐந்து நிலை கோபுரத்தில் உள்ள கலசங்கள் பிரிக்கப்பட்டு வரகு முழுவதுமாக நிரப்பப்பட்டது.நேற்று மேற்கு ஒன்பது நிலை கோபுரத்தில் 2 கலசங்களில் புதியதாக கட்டைகள் வைக்கப்பட்டன. இப்பணி மேலும் ஒரு வார காலத்திற்கு தொடர்ச்சியாக நடக்க உள்ளது.மேலும் சுவாமி கொடிமர தங்க ரேக் பதிக்கப்பட்ட கவசத்திற்கு சதுரப் பெட்டிக்கு மட்டும் கூடுதல் தங்கம் (64,000 கிராம்) பயன்படுத்தி புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று அம்மன் கொடிமர தங்க ரேக் பதிக்கப்பட்ட கவசத்திற்கு சதுரப் பெட்டி உட்பட 7 உருப்படிகளுக்கு மட்டும் கூடுதல் தங்கம் (200 கிராம்) பயன்படுத்தி புதுப்பிக்கும் பணி மற்றும் வெள்ளியம்பல நடராஜர் மற்றும் நுாறுகால் மண்டபம் நடராஜருக்கு கல்கம் சாற்றும் பணி ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.