மன ரீதியான கொடுமைகளுக்கு ஆளானேன்: அனுபமா
தமது கடந்தகால காதல் வாழ்க்கை குறித்து பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்துப் பிரபலமான அவர், அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.
முன்னதாகத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “இறுதியில் உங்கள் அமைதியைக் கண்டறிய, பயனற்ற முடிவுகளை நீங்கள் விட்டுவிட வேண்டும்,” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவு அவரின் காதல் முறிவு தொடர்பானது எனச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.
இந்த நிலையில், காதலித்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது, “அந்தப் பழைய உறவில் கடந்த இரண்டு ஆண்டுகள் நான் கடுமையான மன ரீதியான கொடுமைகளுக்கு ஆளானேன்,” என்று தெரிவித்தார்.
மேலும், “அந்தக் காலகட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, எனது உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தேன்,” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அனுபமா, “எனது இன்ஸ்டகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்களும் உள்ளன,” என்று குறிப்பிட்டார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அத்துடன், “முழுமையாகக் குணமடைந்த பிறகே அதைப் பற்றிப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
தமது மீட்சி குறித்துப் பேசிய அவர், “இது தன்னைத்தானே கண்டறிந்து மீண்டு வந்த ஒரு பெண்ணின் பயணம்,” என்றார்.
மேலும், “நான் காதலித்த ஆடவர் ஒரு சமயத்தில் ரெமோவாக அளவு கடந்த காதலை வழங்குவார்,” என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன், “அடுத்த நாள் ஒரு அந்நியனாகக் கொடூரமாக நடந்துகொள்வார்; அதற்கு அடுத்த நாள் அம்பியாக மாறி மன்னிப்புக் கேட்டு, அப்பாவியாகக் கெஞ்சுவார்,” என்றார்.
நடிகை மடோனா செபாஸ்டியன் மன ரீதியான கொடுமைகள் குறித்துப் பேசிய காணொளியைப் பார்த்தபிறகே, தாம் இருந்த ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்து நடுங்கியதாகக் கூறியுள்ளார்.