📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 03, 2026 02:04 AM

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் வழக்கு; 4 மாதங்களில் இறுதி அறிக்கை

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் வழக்கு; 4 மாதங்களில் இறுதி அறிக்கை

மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த தபால் கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரி பொருட்கள், மருத்துவ உதவி பொருட்கள் போன்றவற்றை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைத்து, அதற்கு கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது போல போலியாக கணக்கு தயாரித்து 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞரும், சிறை கைதிகள் உரிமை மைய இயக்குனருமான புகழேந்தி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016 முதல் 2021 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் அதை வந்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே மதுரை மத்திய சிறை பள்ளியில் உதவியாளராக பணியாற்றிய தன்னுடைய கணவருக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி சிறைவாசியின் மனைவி கோகிலா என்பவர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி ஜோதிராமன் அடங்கிய அமர்வில இன்று விசாரணைக்கு வந்தபோது, போலி கணக்கு காட்டி 100 கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கு விசாரணை மந்தமாக நடைபெற்று வருவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், விரிவான விசாரணையை முடிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும், விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்காக சிறப்பு குழுவை அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, 4 மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர். அவ்வாறு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் இந்த வழக்கின் விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.