மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு; அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைப்பு; அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒரு முன்னாள் முதல்வர், முக்கிய அரசியல் கட்சியின் தலைவர் மற்றும் தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பை குறைப்பது என்பது சாதாரண நிர்வாக நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்பட முடியாது.
பாதுகாப்பு என்பது அரசியல் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக் கூடாது. ஒருவரின் அரசியல் நிலைப்பாடு அல்லது அவர் வகிக்கும் அரசியல் பாத்திரத்தின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் செய்வது ஜனநாயக மரபுகளுக்கு உகந்ததல்ல. மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கான காரணங்களை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக மக்களுக்கு விளக்க வேண்டும். அரசியல் எதிரிகளை எதிர்கொள்வது என்பது ஜனநாயகத்தில் அரசியல் விவாதத்தின் மூலமாக இருக்க வேண்டும். அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக இருக்கக்கூடாது.
எனவே, மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை குறைத்திருப்பது தொடர்பான முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவருக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்த விவகாரத்தில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பதை அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு அரசியல் தலைவரின் பாதுகாப்பு என்பது அவரது தனிப்பட்ட பிரச்னை மட்டுமல்ல; அது ஜனநாயகத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் சகிப்புத்தன்மையுடன் தொடர்புடைய பொதுப்பிரச்னையாகும்.