Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு!
Nepal Flood: நிலநடுக்கம் அல்ல, பனிப்பாறை சரிவு! - காரணத்தை சொல்லும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
புதன்கிழமை காலை நேபாள-சீன எல்லையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக யு.எஸ்.ஜி.எஸ் முதலில் அறிவித்தது.
நேபாளத்தில் புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பேரழிவிற்கு நிலநடுக்கம் காரணம் என முதலில் கூறப்பட்ட நிலையில், அது ஒரு மிகப்பெரிய பனிப்பாறை சரிவால் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட அறிக்கையில், 'பதிவான நில அதிர்வுகள் நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை, மாறாக அது ஒரு பனிப்பாறை சரிவு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பாறை மற்றும் மண் சரிவு. நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை' என்று உறுதிப்படுத்தியது.
தற்போது பிளானட் லேப்ஸ் (Planet Labs) செயற்கைக்கோள் படங்களின் முதற்கட்ட ஆய்வில், நேபாள-சீன ரசுவாகதி எல்லைக்கு வடகிழக்கே சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள லெண்டே நதியில் பனி மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததே இந்த பேரழிவிற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த பனிப்பாறை சரிவின் தாக்கம், 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு சமமானதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து நேபாளத்திற்குள் பாயும் போதே கோஷி ஆற்றின் கிளை நதியான லெண்டே நதியில் ஏற்பட்ட இந்த சரிவைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 157 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், 341 வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 403 சுற்றுலாப் பயணிகள் பேரழிவிற்குப் பிறகு பல மணிநேரமாகக் காணவில்லை என்று சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது. காணாமல் போன வெளிநாட்டினரில் 142 இந்தியர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா, நெதர்லாந்து, போர்ச்சுகல், தென்னாப்பிரிக்கா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
திபெத் எல்லையை ஒட்டியுள்ள ரசுவாகதி, தாதிங் (Dhading) மற்றும் நுவாகோட் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், திபெத்தின் கிய்ரோங் பகுதியில் 265 பேரைக் காணவில்லை என்று சீனாவின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
நேபாள-திபெத் எல்லையின் திபெத்தியப் பகுதியில் பதிவான பாதுகாப்பு கேமரா காட்சிகளில், சேறு, பாறைகள் மற்றும் நீர் ஆகியவற்றின் பெருவெள்ளம் கட்டிடங்களையும் வாகனங்களையும் அடித்துச் செல்வதற்கு முன்பு, பலர் அலறியடித்து ஓடும் கொடூரமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரதமர் பலேந்திர ஷா, அரசின் அனைத்து வளங்களும் மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளவர்களைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
நுவாகோட் மற்றும் தாதிங் பகுதிகளில் உள்ள நேபாள இராணுவ பயிற்சி மையத்திற்கு வெளியே, காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை அறிய மக்கள் சோகத்துடன் கூடி நிற்கின்றனர். நீர்மின் உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அதிகாரிகள் மொபைல் போன் வெளிச்சத்தில் காணாமல் போனவர்களின் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர்.