பாஜக எம்எல்ஏ மீது நில அபகரிப்பு புகார்; மோடியிடம் முறையிட்டு கதறிய பள்ளித் தோழர்: மகாராஷ்டிரா அரசு உஷார்
பாஜக எம்எல்ஏ மீது நில அபகரிப்பு புகார்; மோடியிடம் முறையிட்டு கதறிய பள்ளித் தோழர்: மகாராஷ்டிரா அரசு உஷார்
பயந்தர்: மகாராஷ்டிராவில் பாஜக எம்.எல்.ஏ.வுக்கு தொடர்புடைய நிறுவனத்தால் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறி, 81 வயது முதியவர் தனது பள்ளித் தோழரான பிரதமர் மோடியைச் சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மீரா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி வோஹ்ரா (81). இவர் குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் படித்தபோது, பிரதமர் மோடியுடன் ஒன்றாகப் பயின்ற பள்ளித் தோழர் ஆவார். அஸ்கர்அலி கடந்த 1989ம் ஆண்டு பயந்தர் கிழக்கு நவகர் பகுதியில் 2,810 சதுர மீட்டர் நிலத்தை முறையாக பத்திரப்பதிவு செய்து வாங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு போலி ஆவணங்களைத் தயாரித்து, தனது நிலத்தை சுவயம் பில்டர்ஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. மேத்தாவுக்கு தொடர்புடைய செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலப் பிரச்னையில் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, அஸ்கர்அலி வோஹ்ரா கடந்த 8ம் தேதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட்டார்.
இச்சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் வெளியிட்டு, பிரதமரால் தனது நண்பருக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட மாநகராட்சி நிர்வாகம், நில விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதுடன், ஆக்கிரமிப்பில் தொடர்புடைய 2 கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் நேரில் ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது.