PAK vs ENG: கடந்த வாரம் வரை பாஸ்போர்டே இல்ல.. ஆனால் இன்று பாக். மானத்தை காப்பாற்றிய ரசாவுல்லா
PAK vs ENG: கடந்த வாரம் வரை பாஸ்போர்டே இல்ல.. ஆனால் இன்று பாக். மானத்தை காப்பாற்றிய ரசாவுல்லா
எட்ஜ்பாஸ்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அண்மைக்காலமாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், எட்ஜ்பாஸ்டனில் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளர் ரசாவுல்லா தனது அபாரமான பேட்டிங் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், 63 பந்துகளில் 81 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் 9 சிக்ஸர்கள் அடங்கும்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி பெரும் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடிக் கொண்டிருந்தது. 312 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த நேரத்தில் எட்டாவது வீரராக ரசாவுல்லா களமிறங்கினார். ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜோஷ் டங் போன்ற இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.
வெறும் 63 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டார். இந்த இன்னிங்ஸில் 9 சிக்ஸர்களைப் பறக்கவிட்டதன் மூலம், டெஸ்ட் அறிமுக ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
ரசாவுல்லா அடிப்படையில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்றாலும், அவரது பேட்டிங் திறமை இந்த ஆட்டத்தில் வெளிப்பட்டுள்ளது. பந்துவீச்சிலும் தனது திறமையை நிரூபித்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் வீசிய நான்காவது பந்திலேயே இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் கணக்கைத் தொடங்கினார். மேலும் ஜேமி ஸ்மித்தின் முக்கிய விக்கெட்டையும் அவர் கைப்பற்றினார்.
மர்தான் பகுதியில் பிறந்த ரசாவுல்லா, 2025 நவம்பர் மாதத்தில்தான் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதற்கு முன்பு வெறும் 8 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்டவர். பெஷாவர் அணிக்காகத் தொடக்க வீரராகக் களம் இறங்கி ஒரு சதமும் அடித்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதைத் தொடர்ந்து, அணியில் ஏழு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் எதிர்பாராத விதமாக ரசாவுல்லாவுக்கு இப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
ரசாவுல்லாவுக்கு கடந்த வாரம் வரை பாஸ்போர்ட் இல்லை. பாகிஸ்தான் அணியில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விசா நடைமுறை முடிக்கப்பட்டு, இங்கிலாந்து அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 வாரங்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான், கடைசி டெஸ்டில் கடைசி பேட்டிங் வாய்ப்பில் அபாரமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமது அதிரடி ஆட்டம் குறித்துப் பேசிய ரசாவுல்லா, "மைதானத்தில் ரசிகர்கள் எனக்கு எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்ததை மிகவும் ரசித்தேன். நாட்டுக்காக விளையாடும் போது எதற்கும் பயப்படத் தேவையில்லை. வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள நான் பயப்படவில்லை. ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஷார்ட் லென்த் பந்துகளை எதிர்கொள்வதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.