📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 04, 2026 03:03 PM

“பேன்ட்டை மாற்றுவது போல பாகிஸ்தான் வீரர்களை மாற்றுகிறார்”.. ஆகிப் மீது ஆவேசமடைந்த ஜேசன் கில்லஸ்பி

“பேன்ட்டை மாற்றுவது போல பாகிஸ்தான் வீரர்களை மாற்றுகிறார்”.. ஆகிப் மீது ஆவேசமடைந்த ஜேசன் கில்லஸ்பி

“பேன்ட்டை மாற்றுவது போல பாகிஸ்தான் வீரர்களை மாற்றுகிறார்”.. ஆகிப் மீது ஆவேசமடைந்த ஜேசன் கில்லஸ்பி

லாகூர்: பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து 7 வீரர்கள் பாதி இங்கிலாந்து தொடரில் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் கேலிக்கூத்தான குளறுபடிகளையும், தேர்வுக் குழு தலைவர் ஆகிப் ஜாவித்தின் பொறுப்பற்ற முடிவுகளையும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி மிகக் கடுமையாக விளாசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. இதனால் இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து தொடர் முடிவதற்கு முன்பே சல்மான் அலி ஆகா உள்ளிட்ட 7 வீரர்களை வீட்டுக்கு அனுப்பி பாகிஸ்தான் வாரியம் அதிரடி நாடகம் ஆடியது. தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது, பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரையும் உடனடியாக நீக்கியது.

இந்த கோமாளித்தனமான முடிவுகளை வெளுத்து வாங்கியுள்ள கில்லெஸ்பி, "பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தேர்வுக்குழுவுக்கு எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை. ஆகிப் ஜாவேத் தினமும் பேன்ட்டை மாற்றுவது போல தங்கள் முடிவுகளை, வீரர்களை மாற்றுகிறார். முதல் டெஸ்டில் கேப்டனாக இருந்த சல்மான் அலி ஆகா, 3வது போட்டிக்கு முன் விமானம் ஏறி வீட்டுக்கு விரட்டப்படுகிறார். இது வீரர்களின் வாழ்வாதார பிரச்சனை. அணிக்குள் நிலவும் அச்சத்தால் வீரர்கள் நடுங்கிப் போய் ஆடுகின்றனர்" என விமர்சித்தார்.

மேலும், "தாங்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டதை வீரர்கள் தேர்வுக் குழு மூலம் அறியாமல், உறவினர்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாகவே தெரிந்து கொள்ளும் அவலம் அங்கு நடக்கிறது. வீரர்களுக்கு துளிக்கூட மரியாதை இல்லை" என்று கொதித்தார். 2 ஆண்டுகளாக தேர்வுக்குழு தலைவராக இருக்கும் ஆகிப் ஜாவித், தனது தவறுகளுக்கு என் மீதும் கேரி கிர்ஸ்டன் மீதும் பழிபோடுவதை விடுத்து முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும் எனவும் குத்திக் காட்டினார்.

முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும் பாகிஸ்தானின் இந்த மோசமான சூழலை அப்பட்டமான முட்டாள்தனம் என சாடியுள்ளார். டெஸ்ட் தொடரின் பாதியில் மைக் ஹெசன் தலைமையில் அவசர பயிற்சியாளர் குழுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது. தற்போது புதிய பயிற்சியாளர் குழுவின் கீழ் அனுபவமற்ற வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி வரும் செப்டம்பர் 9ல் எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் 3வது டெஸ்டில் பங்கேற்க உள்ளது.