பண மோசடி வழக்கு| தலைமறைவான நபர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த போது சிக்கினார்
பண மோசடி வழக்கு| தலைமறைவான நபர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த போது சிக்கினார்
பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்பத்தை அண்மையில் கைது செய்ய முயன்ற போது, அவர் வெளிநாட்டிற்கு தப்பியது தெரியவந்தது.
Published : August 17, 2026 at 7:40 PM IST
பெரம்பலூர்: பண மோசடி மற்றும் நில அபகரிப்பு புகார்கள் தொடர்பான வழக்குகளில் சிக்கி தலைமறைவான நபர், சிங்கப்பூரில் இருந்து இன்று சென்னை வந்த போது கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்பத் (38). இவர் மீது பண மோசடி, போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு உள்ளிட்ட புகார்கள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இந்த புகார்களின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்பத் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்பத்தை அண்மையில் கைது செய்ய முயன்ற போது, அவர் வெளிநாட்டிற்கு தப்பியது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பத்தை தேடப்படும் குற்றவாளி என அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை, சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளை, குடியுரிமை அதிகாரிகள் சோதித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதே விமானத்தில் வந்த சம்பத்தை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்கையில், அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அவரை தங்கள் பாதுகாப்பில் குடியுரிமை அதிகாரிகள் வைத்தனர். பின்னர், அவரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சென்னைக்கு விரைந்துள்ளனர். அவர்கள் வந்ததும் சம்பத்தை ஒப்படைக்க சென்னை விமான நிலைய போலீசார் முடிவு செய்துள்ளனர்.