பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை...வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
புதிய அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்கள் நிதி மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய அரசின் பாதையை தீர்மானிப்பது முதல் 100 நாட்கள் தான். 100 நாள் செயல்திட்டங்களை புதிய அரசு வெளியிடுவது வழக்கம், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் முதலீடுகள் கிடைக்கும். தவெகவை போல் ஏற்கெனவே வெள்ளை அறிக்கையை அதிமுக, திமுகவும் வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குளறுபடி. ஒதுக்கப்பட்ட நிதியில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியம் முறையாக தரப்படுமா என விளக்கம் அளிக்க வேண்டும். வருவாயை பெருக்க நடவடிக்கை இல்லை, வருவாய் பற்றாக்குறையை குறைக்கவும் நடவடிக்கை இல்லை. நிதி மேலாண்மைக்கு சரியான பாதை போடப்படவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது. 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் 20 லட்சம் கோடியாக உயர்த்திவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு வெற்றி என பெயர் மாற்றி உள்ளீர்கள். தமிழ்நாட்டில் உள்ள 40,000 அரசு பள்ளிகளிலும் தரமும் உயர்த்தப்பட வேண்டும். அதற்கு உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவையில் திறம்பட பேசும் அமைச்சர் ராஜ்மோகன், 40,000 பள்ளிகளுக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார் என நம்புகிறேன்.
பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும்.தமிழகத்திற்கு நிதியை பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு துறைகளில் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது.காலி பணியிடங்களை படிப்படியாக நிரப்பினால்தான் அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
ஆட்சிக்கு வந்த உடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறினீர்கள், அதனை செயல்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை நிறுவனங்களில் ஒன்றரை லட்சம் காலிப்பணியிடம், மின்சாரத்துறையிலும் பல காலிப்பணியிடங்கள் உள்ளன.மின்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் இருப்பதன் காரணமாகத்தான் அதிக மின்தடைகள் ஏற்படுகிறது.
கொரோனா காலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு அதிமுக. பல்வேறு திட்டங்கள் செயல்படுத்திய அதிமுக ஆட்சி காலத்தில் கடன் சுமை குறைவாக இருந்தது. சொத்து வரி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக கொண்டு வந்த உழவன் செயலி திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.விவசாயிகள் நலன் கருதி ஓசூரில் உள்ள சர்வதேச மலர் ஏல மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ விளைச்சல் அதிகம், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு, தேவையான நிவாரணம் தரப்பட வேண்டும்.தட்கல் முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் 65,000 விவசாயிகளுக்கு உடனடியாக பம்பு செட் தரப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.