புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு புதுவை தமிழ்ச் சங்கம் வரவேற்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்ற முதல்வர் ரங்க சாமியின் அறிவிப்புக்கு, புதுவை தமிழ்ச்சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசின், 2026-27ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், உலகத் தமிழ் மாநாடு புதுச்சேரியில் நடத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமையிலான நிர்வாகிகள், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, பாராட்டு தெரிவித்தனர்.
சங்க தலைவர் முத்து, முதல்வரிடம் கூறுகையில் 'தமிழ் இலக்கியம், பண்பாடு, தமிழர் கலைகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு புதுச்சேரி மக்கள் மட்டும் அல்லாது, உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து தமிழர்கள் மனதிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய விடுதலை நாள் விழாவிலும், சட்ட சபை நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மக்கள் நலன் கருதி சிந்தித்து செயலாற்றி வரும் தங்களின் அனைத்துப் பணிகளுக்கும், புதுவைத் தமிழ்ச் சங்கம் உறுதுணையாக நிற்கும். புதுவைத் தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ் மாநாட்டுப் பணிகள் அனைத்திலும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
சந்திப்பின் போது, தமிழ்ச் சங்க செயலர் சீனு மோகன்தாஸ், பொறியாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, அக்ரி கணேஷ், ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.