திருமணம் இருந்தால் என்ன? எனக்கு கிரிக்கெட் போட்டி தான் முக்கியம்.. விடுமுறையே இல்ல
திருமணம் இருந்தால் என்ன? எனக்கு கிரிக்கெட் போட்டி தான் முக்கியம்.. விடுமுறையே இல்ல- ரிங்கு சிங்
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், தனது திருமணத்திற்கு முன்னதாக மிகவும் பிஸியான கிரிக்கெட் அட்டவணை காரணமாக எந்தவொரு போட்டியிலிருந்தும் ஓய்வு எடுக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2023-இல் தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட இவர், இதுவரை இந்தியாவிற்காக 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "அலிகாரில் இருந்து ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் விளையாடிய முதல் வீரர் நான்தான், இது எனக்கு பெருமைக்குரிய விஷயமாகும்.
"தற்போது நான் உலக அரங்கில் கால் பதிக்கும்போது, அது எனக்கு மட்டுமல்லாமல், நான் வந்த இடத்திற்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று ரிங்கு சிங் கூறினார். லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் ஜூனியர் போன்ற முன்னணி சர்வதேச கால்பந்து நட்சத்திரங்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஒரு பிரபல நிறுவனத்துடன் ரிங்கு சிங் ஒப்பந்தம் செய்துள்ளார்.
வீரர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதில் அந்த நிறுவனம் காட்டிய முக்கியத்துவம் தமக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், தனது எளிய பின்னணியில் இருந்து வந்த போராட்டத்தின் கதையை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், "நான் யார், எங்கிருந்து வந்தேன் என்பதை நான் மாற்ற விரும்பவில்லை" என்றும் அவர் கூறினார்.
ரிங்கு சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பியான பிரியா சரோஜ் ஆகியோரின் திருமணம் 2026 டிசம்பர் 4 அன்று லக்னோவில் உள்ள ரமாடா ஹோட்டலில் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் ஜூன் 8, 2025 அன்று லக்னோவில் நடைபெற்றது. ஆனால், ரிங்கு சிங்கின் தந்தையின் மறைவையடுத்து இவர்களின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையிலும், தொடர்ச்சியான கிரிக்கெட் போட்டிகள் காரணமாக விளையாட்டில் இருந்து விலகியிருக்க அவர் விரும்பவில்லை. "திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் எனது குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். என்னால் எந்தப் போட்டிகளையும் தவிர்க்க முடியாது" என்று ரிங்கு சிங் கூறியுள்ளார்.