திருவள்ளூர் அருகே நடந்த தவெக பிரமுகர் கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே நடந்த தவெக பிரமுகர் கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நடந்த தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கொலையில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரை கைது செய்தனர்.திருவள்ளூர் அருகே அகரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). தமிழக வெற்றிக் கழக பிரமுகரான இவர், தனியார் கம்பெனியில் பணியாற்றினார். நேற்று அகரம் கிராமத்தில் ஒரு பெண் இறந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் நடனமாடுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக மணிகண்டன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து மணிகண்டனை வெட்டிய நபர்களை உடனே கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி அகரம் கிராமம் அருகே திருவள்ளூர் - சுங்குவார்சத்திரம் சாலையில் மணிகண்டனின் உறவினர்கள் நேற்று சாலை மறியல் நடத்தினர். கடம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ‘’கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தனர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி சாய் பிரனீத் உத்தரவின்படி, திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில், கடம்பத்தூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கொலை செய்த நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் மீன்வெட்டும் தொழில் செய்து வந்த கசவநல்லாத்தூரை சேர்ந்த கார்த்தி (23), செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விஜய் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2 பேரும் கஞ்சா போதையில் மணிகண்டனை கத்தியால் வெட்டியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த கடம்பத்தூரை சேர்ந்த கோகுல் (23) என்பவரை இன்று அதிகாலை இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.