📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 19, 2026 09:30 AM

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!

சென்னையில் செயல்பட்டு வரும் கணினி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானவரி சோதனை

சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் செயல்பட்டு வரும் கணினி தொழில்நுட்பத் தொடர்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்திற்கும் வெளிநாட்டு நிறுவனங்க ளுக்கும், இந்தியாவின் சிறிய நிறுவனங்களுக்கும் இடையே நடந்த நிதிப் பரிமாற்றங்களில் உள்ள முறைகேடுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

நேற்று 5 இடங்களில் சோதனை

இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய எர்ணாவூர், ஆழ்வார்பேட்டை, விருகம்பாக்கம், ராஜமங்கலம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடந்தது. அனைத்து இடங்களிலும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தீவிர ஆவணச்சரிபார்ப்பு உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்டனர்.

வரி செலுத்தாமல் வருவாயை மறைத்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த இந்த புகார்கள் மற்றும் கணக்கில் வராத நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன்படி கணினி பதிவுகள் மற்றும் நிதி ஆவணங்கள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. சோதனை முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மதிப்பு, ரொக்கம் உள்ளிட்டவை தெரிய வரும் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இந்த நிலையில், சென்னையில் இன்று டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சென்னையில் மட்டும் பெருங்குடி (4 இடங்கள்), அண்ணா நகர் (3 இடங்கள்) உள்பட 27 இடங்களிலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.