தமிழகத்தில் 52 கோவில்களில் இன்று முதல் மொபைல் போன் கொண்டு செல்ல தடை
சென்னை: பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்வதற்கான தடை, தமிழகத்தில் 52 முக்கிய கோவில்களில், இன்று (செப்.,01) முதல் அமலுக்கு வந்தது; கோவில் வளாகத்தில் பாதுகாப்பான மொபைல் போன் வைப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் சில பக்தர்கள் பிரகாரங்கள், சிற்பங்கள் முன்பு மொபைல்போனில் செல்பி, ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுகின்றனர். மேலும் கோவில் கருவறையில் உள்ள சிலையை புகைப்படம், வீடியோ எடுத்து பரப்புகின்றனர். இதனால் கோவிலின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுவதுடன் சுவாமி தரிசனம் செய்யும் பிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
குறிப்பாக ஆக.,3ல் ராஜஸ்தானை சேர்ந்த இரு ஜோடி தம்பதிகள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 3ம் பிரகாரத்தில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனால் சர்ச்சை எழுந்தது. இதன் எதிரொலியாக இன்று (செப்.,1) முதல் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள 52 கோவில்களில் பக்தர்கள் மொபைல் போனை எடுத்து செல்ல ஹிந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது. இதனால் இன்று முதல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் செலுத்தி விட்டு (கட்டணம் ரூ.5) கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, பின்னர் பக்தர்களிடம் திரும்ப ஒப்படைப்பதை உறுதி செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறை கோவில் நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கோவிலின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதையும், கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதையும், ரீல்ஸ் எடுப்பதை தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
பக்தர்கள் பேட்டி
சென்னையில் இருந்து வந்த மற்றொரு பக்தர் சாந்தி கூறியதாவது: நல்ல ஒரு முடிவு. எல்லோரும் உள்ளே போகும் போது செல்போனை காதில் வைத்து கொண்டு இருக்கிறார்கள். செல்போனை எடுத்து செல்வது தொந்தரவு தான்.விஜய்க்கு எங்களுடைய வாழ்த்து, என்றார்.
சாதாரண மொபைல்போன்களுக்கு தடையில்லை!
இது குறித்து ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்; இன்று முதல், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோவில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோவில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்கு தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய மொபைல்போன்களை முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், மொபைல்போன்களை திருக்கோவில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவசரகாலத் தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோவில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண மொபைல் போன்களுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது திருக்கோவில்களில் ஆரோக்கியமான, அமைதியான மற்றும் ஆன்மிகமான வழிபாட்டுச் சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. அனைவரும் ஒன்றிணைந்து, நமது திருக்கோவில்களில் சிறப்பான வழிபாட்டுச் சூழலை உருவாக்கிடுவோம். அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
களத்தில் தினமலர்!