தமிழ்நாட்டில் பிரம்மாண்ட ’AI நகரம்’: விஜய் அரசின் மாஸ்டர் பிளான்..!! அதுவும் இந்த ஊரில்..!!
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் உலகம் முழுவதுமே பரவலாக பேசப்படும் ஒரு விஷயம். ஏஐ தொழில்நுட்பத்தில் எந்த நாடு முன்னேறுகிறதோ எதிர்காலத்தில் அந்த நாடு தான் ஆதிக்கம் செலுத்தும் நாடாக இருக்கும். இதனால் தான் அமெரிக்காவும் சீனாவும் போட்டி போட்டு கொண்டு ஏஐ ஆய்வுகளை நடத்துகின்றன. இந்தியாவும் இந்த போட்டியில் இணைந்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசுகளும் ஏஐ தொடர்பான முன்னேற்றங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக ஏஐ துறையை மேம்படுத்தவும், உலக தரம் வாய்ந்த ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்கவும், ஒரு புதிய ஏஐ நகரத்தை (AI City) அமைக்க திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட்டில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏஐ சிட்டி உருவாக்கப்படவுள்ளது. இங்கே அலுவலகங்கள், ஏஐ மேம்பாட்டு மையங்கள் , ஆராய்ச்சி கூடங்கள் , உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஊழியர்களுக்கான பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், குடியிருப்பு வசதிகள் என அனைத்தும் இடம் பெற்றிருக்கும்.
தமிழ்நாட்டில் ஏஐ துறை சார்ந்த திறனாளர்களை உருவாக்குவதையும், உலக அளவில் தமிழகத்தை ஏஐ துறையில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுவதையும் இலக்காக கொண்டு விஜய் அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஏஐ துறை அமைச்சர் ஆர்.குமார், இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, 3,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்ட நகரமாக இருக்கும் என்றும், இதன் கிளைகள் 16 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு, அங்கு ஏஐ திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஏஐ சிட்டி திட்டத்தை டிட்கோ மற்றும் தொழில்துறை அமைச்சகம் இணைந்து மேற்கொள்ளும் என சொல்லப்படுகிறது. புதிய ஏஐ ஸ்டார்ட் அப்கள் மற்றும் அது சார்ந்த தொழில்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஏஐ கணினி தேவைகளுக்காக மானியத்துடன் கூடிய சலுகைகளை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. சென்னைக்கு அருகிலேயே இந்த நகரம் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் ஏஐ மற்றும் ஸ்டார்ட்அப் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாகவும், ஏஐ சார்ந்த வல்லுநர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. தெலுங்கானா , ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏஐ துறையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழ்நாடும் இந்த பாதை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
அந்த வகையில் ஏஐ துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், தமிழகத்தில் உள்ள திறமையான நபர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்வதை தடுக்கவும் இந்த ஏஐ சிட்டி ஒரு தீர்வாக அமையும் என அரசு நம்புகிறது. முன்னதாக, தவெக சார்பில் தேர்தல் வாக்குறுதியிலும் அறிவகம் என்ற பெயரில் ஏஐ சிட்டி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Tamil Nadu Likely to Announce AI City in Budget: New AI Hub, Jobs, Startups Near Chennai