தமிழ்நாட்டுக்குத் தினமும் 12,000 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு
புதுடெல்லி: காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தினமும் 12,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு இனி வரும் 15 நாள்களுக்கு தினமும் 3,500 கன அடி நீரைத் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை ஏற்று கர்நாடகா நீரைத் திறந்துவிடவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தின் 140வது கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) மாலை நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தரப்பில் கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை மாதவாரியாக வழங்கவில்லை என முறையிட்டனர்.
அதற்கு கர்நாடக அரசுத் தரப்பில், “கர்நாடகாவில் தென்மேற்குப் பருவ மழை போதுமான அளவு பெய்யாததால், கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு போதிய நீர் வரவில்லை. இந்நிலையில் தமிழகத்துக்கு பாக்கி வைத்துள்ள நீரை முழுவதுமாகத் திறக்க இயலாது,” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுத் தலைவர், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகா முன்வர வேண்டும். தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 12,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும்,” என்று பரிந்துரைத்தார்.
அதன் பிறகு நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அப்போது, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டது. அதன்படி, ஆகஸ்ட் 12 முதல் தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.