📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 26, 2026 12:03 AM

தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான்

தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான்

தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான் - அதிர்ச்சி அளிக்கும் உடற்கூறாய்வு அறிக்கை!

10 அடி தூரத்திற்குள் இருந்தே வனத்துறையினர் சுட்டதாக தகவல்.

"மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுண்டர்தான்" என்பதை உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிப்பதாக, கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனுர் தாலுகாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். வனப்பகுதியில் மேயச்சென்ற மாடுகள் காணாமல் போனதால் தேடிச்சென்ற அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், டேவிட் குமார், மகிமைதாஸ் ஆகியோர் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயத்தோடு மகிமைதாஸ் தப்பி ஓடிவிட மற்ற மூவரும் உயிரிழந்தார்கள்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மான் வேட்டையாட வந்தவர்களுடன் நடந்த மோதலில், தற்காப்புக்காக தூரத்திலிருந்து சுட்டதாக வனத்துறையினர் கூறினர்.

"இது மோசமான சம்பவம், அப்பாவிகளை வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்" என்று, அங்கு வசிக்கும் மக்களும், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட கன்னட அமைப்பினரும் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள்.

இந்த நிலையில் மைசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கையிலுள்ள தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், கொல்லப்பட்ட மூன்று பேரும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்தே சுடப்பட்டுள்ளனர் என்றும், ஜான்ரோஸ் பீட்டரின் இடது காது பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செண்டி மீட்டர் நீளத்திற்கு ஆழமான கடுமையான காயம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புக்காக தூரத்திலிருந்து சுட்டதாக வனத்துறையினர் கூறி வந்த நிலையில், உடற்கூறாய்வு அறிக்கை அதற்கு மாறாக உள்ளது.

இந்த தகவல் கொல்லப்பட்டவர்களின் ஊர் மக்களையும், கர்நாடக மாநில விவசாயிகளையும், எதிர்க்கட்சிகளையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

"இது அப்பட்டமான போலி என்கவுண்டர், இந்த வழக்கை கர்நாடக போலீஸ் விசாரித்தால் உண்மை வெளிவராது, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்" என்று கர்நாடக மாநில பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.