“தனுஷ் அந்த நேரத்துல முரட்டுத்தனமா இருப்பாரு..”
“தனுஷ் அந்த நேரத்துல முரட்டுத்தனமா இருப்பாரு..” - பிரியா பவானி சங்கர் ஓபன்..!
நடிகர் தனுஷை சோர்வாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துக் கொள்வார் என்றும், அதன் பிறகு அதற்கான காரணம் என்ன என்பது தனக்கு தெரிந்த்தகாவும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ஓபனாக பேசியுள்ளார்.
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ‘இருமுடி’ திரைப்படத்தில் நடித்துள்ள பிரியா பவானி ஷங்கர், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது ஆரம்பகால அனுபவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தான் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது தனுஷை பேட்டி கண்டதாக தெரிவித்த பிரியா, அப்போது அவர் மிகவும் சோர்வாக இருந்ததாகவும், பேட்டியில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால், “தனுஷ் கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கிறார்” என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பின்னர் தானும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, தொடர்ந்து நடைபெறும் பட புரமோஷன்கள், ஒரே மாதிரியான கேள்விகளுடன் கூடிய பேட்டிகள் மற்றும் நீண்ட நேர பணிச்சுமை ஆகியவற்றை அனுபவித்தபோதுதான், ஒரு நடிகர் சில நேரங்களில் ஏன் சோர்வாகவோ ஆர்வமில்லாமலோ இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டதாக பிரியா தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு தனுஷை மீண்டும் சந்தித்தபோது, தனது பழைய எண்ணத்தையும் அவரிடம் நேரடியாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.
“அப்போது நீங்கள் உண்மையிலேயே முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறீர்கள் என்று நினைத்தேன்” என தனுஷிடம் தான் கூறியதாக பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
நடிகை ப்ரியா பவானி ஷங்கர் பகிர்ந்துகொண்ட இந்த சுவாரஸ்யமான பழைய நினைவு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.