📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 24, 2026 08:04 PM

துலீப் கோப்பை 2026: வேகப்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்டம்ப் பக்கம் நின்று அவுட் செய்த இசான் கிஷன்

துலீப் கோப்பை 2026: வேகப்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்டம்ப் பக்கம் நின்று அவுட் செய்த இசான் கிஷன்

துலீப் கோப்பை 2026: வேகப்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்டம்ப் பக்கம் நின்று அவுட் செய்த இசான் கிஷன்-வீடியோ

பெங்களூரு: துலீப் டிராபி 2026 கால்இறுதிப் போட்டியில், வடகிழக்கு மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன், அசத்தலான விக்கெட் கீப்பிங் திறமையால் ஆஷிஷ் தாப்பாவை ஆட்டமிழக்கச் செய்தார். 36 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த தாப்பாவை வீழ்த்த கிஷன் ஒரு அற்புதமான ஸ்டம்பிங்கை மேற்கொண்டார்.

குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் அபிஜித் கே சர்க்காரின் பந்துவீச்சில் விக்கெட்டுகளுக்கு மிக அருகில் நின்றுகொண்டே கிஷன் இந்த ஸ்டம்பிங்கை செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ஆட்டத்தின் 21வது ஓவரில், வலது கை வேகப்பந்து வீச்சாளரான சர்க்கார் லெக் சைடில் ஒரு ஃபுல் லென்த் பந்தை வீசினார்.

அதை ஃபிலிக் செய்ய முயன்ற தாப்பா பந்தை அடிக்கத் தவறினார். அப்போது பந்தைக் கச்சிதமாகப் பிடித்த கிஷன், பேட்ஸ்மேன் தனது சமநிலையை இழந்து தடுமாறியதைக் கவனித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் பெய்ல்ஸை அகற்றினார். கிஷனின் இந்த மின்னல் வேகச் செயல்பாடு முன்னணி பேட்ஸ்மேனின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் வடகிழக்கு மண்டல அணி தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அந்த அணி 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து, இன்னும் 356 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வடகிழக்கு மண்டல அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிமன்யு ஈஸ்வரன் 20 பந்துகளில் 15 மற்றும் வைபவ் சூர்யவன்ஷி 6 பந்துகளில் 8 ரன்கள் ஆகியோர் பெரிய அளவில் சோபிக்காமல் ஏமாற்றம் அளித்தனர்.

இருப்பினும், ஷாபாஸ் அகமது 244 பந்துகளில் 167 ரன்கள் குவித்தார். சுதீப் குமார் கராமி 185 பந்துகளில் 146 ரன்கள் ஆகியோர் அபார சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குமார் குஷாக்ராவும் தன் பங்கிற்கு 65 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். ஆனால், 6வது வீரராக களம் இறங்கிய கேப்டன் இஷான் கிஷன் பேட்டிங்கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், ஃபைரோய்ஜம் ஜோடின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

வடகிழக்கு மண்டலம் தரப்பில் ஜோடின் மற்றும் ஆகாஷ் சௌத்ரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் தொடங்கும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இறுதிப் போட்டி செப்டம்பர் 6 முதல் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.